1933 - புரட்சி நடந்து 16 ஆண்டுகளுக்குப்பின் சோவியத் ஒன்றியத்துக்கும், அமெரிக்காவுக்கும் இடையே யான அரசுமுறை உறவுகள் தொடங்கப்பட்டன. புரட்சிக்குப் பிந்தைய அரசை அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை. புரட்சியை ஒடுக்க விரும்பினாலும், அதற்கு ரஷ்ய மக்களிடையே இருந்த ஆதரவு காரணமாக, ஆக்கிரமிக்கும் நாடு என்ற பெயர் ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தில் ராணுவத்தை அனுப்ப அமெரிக்கா தயாராக இல்லை. புரட்சி வென்றபோது நடை பெற்றுக்கொண்டிருந்த முதல் உலகப்போரிலிருந்து ரஷ்யா விலகிக்கொள்வதாக லெனின் அறிவித்துவிட, ரஷ்யாவுடன் போரிட்டுக்கொண்டிருந்த ஜெர்மன் படைகள், பிற நேச நாடுகளுடன் போரிட வந்ததும் அமெரிக்காவின் கோபத்திற்குக் காரணமாக அமைந்தது. ஜார் அரசு வாங்கியிருந்த அந்நியக் கடன்களுக்குப் புதிய அரசு பொறுப்பேற்காது என்று அறிவித்த லெனின் (வரும் பிப்ரவரி 8இல் விபரமாக!), அந்நியர்களுக்குச் சொந்த மானவை உட்பட அனைத்துத் தொழில்களையும், சொத்துக்களையும் நாட்டுடைமையாக்கியதில், (நேச நாடுகள் அணியிலிருந்த பிரான்ஸ் உள்ளிட்ட) நாடுகள் கோடிக்கணக்கான பவுண்டுகளை இழந்தன. இவற்றால், புரட்சிக்கு எதிரானவர்களுக்கு உணவு முதலான உதவிகளை அமெரிக்கா செய்தாலும், அவற்றுக்குப் பலனின்றிப்போன நிலையில், ரஷ்யாவுடனான அரசு முறை உறவைத் துண்டித்துக்கொண்டது.
தொழிலாளர் புரட்சிகளை நடத்தி உலகம் முழுவதும் பொதுவுடைமை அரசுகளை நிறுவுதலை, பொதுவுடைமை அகிலம் (கொமிண்ட்டெர்ன்) நோக்கமாகக் கொண்டிருந்ததால், சோவியத் ஒன்றியத்தை முதலாளித்துவத்துக்கான அச்சுறுத்தலாகக் கருதிய அமெரிக்கா, சோவியத்துடன் அரசுமுறை உறவுகளை உருவாக்கிக்கொள்ளவில்லை. சோவியத் ஒன்றியம் அதிக காலம் நீடித்திருக்காது என்ற அமெரிக்காவின் கணிப்பு பொய்த்ததுடன், பல நாடுகளும் சோவியத்துடன் அரசுமுறை உறவுகளை ஏற்படுத்திக்கொண்டதால், சோவியத்துடன் வணிக உறவுகள் தேவை என்ற கருத்து 1930களில் அமெரிக்காவில் உருவாகத் தொடங்கியது. ஏறக்குறைய அமெரிக்காவுக்கு இணையான மக்கள்தொகையையும், இரண்டரை மடங்கு நிலப்பரப்பையும் கொண்ட ‘ஒரு சந்தை’ தன்னைவிட்டு விலகியிருப்பதை முதலாளித்துவம் விரும்பவில்லை என்பதுதான் பின்னணி! ஹென்றி போர்டு உள்ளிட்ட பலரும் சோவியத்துட னான உறவுகளை வலியுறுத்திய நிலையில், அமெரிக்கத் தொழிலாளர்களும் சோவியத்துக்கு ஆதரவு-எதிர்ப்பென்று பிளவுற்றனர். (பொது வுடைமைக்கு ஆதரவானவர்கள் பின்னாளில் அழித்தொழிக்கப்பட்டனர்!) சோவியத்துடனான உறவை வெளியுறவுத்துறை ஏற்காது என்பதால், தனிப்பட்ட முறையில் முயற்சித்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் ஃப்ராங்க்ளின்-டி-ரூஸ்வெல்ட், 1,100 இதழாசிரியர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியதில், 27 சதவீதம் மட்டுமே சோவியத்துடனான உறவை எதிர்த்தனர்! அதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் பொதுவுடைமையைக் கொண்டுவர முயற்சிக்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டுடன், சோவியத்துடனான அரசுமுறை உறவு ஏற்படுத்தப்பட்டது!