tamilnadu

img

இந்நாள் ஜுன் 18 இதற்கு முன்னால்

1887 - ஜெர்மனி, ரஷ்யா இடையே ‘மறுகாப்பீட்டு ஒப்பந்தம்( ரீ இன்சூரன்ஸ் ட்ரீட்டி)’ என்னும் பரம ரகசிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன்படி, ரஷ்யாவோ, ஜெர்மனியோ மற்றொரு பெரும்சக்தியுடன் போரிட நேர்ந்தால், ஒப்பந்தத்திலுள்ள மற்றொரு நாடு நடுநிலை வகிக்கவேண்டும். பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரியா, ரஷ்யா, ஜெர்மனி ஆகியவை ஐம்பெரும் சக்திகளாக அப்போது விளங்கின.  ஜெர்மன் மொழி பேசும் பகுதிகளை, டென்மார்க், ஆஸ்திரியா, பிரான்ஸ் ஆகியவற்றுடனான தனித்தனிப் போர்களில் கைப்பற்றி, ஒருங்கிணைத்து, ஜெர்மனியை உருவாக்கிய பிஸ்மார்க், அதன் வளர்ச்சிக்கும், மக்கள் நலனுக்கும் இடையூறாக இருந்த போர்களைத் தவிர்க்க மிகச்சிறந்த அயலுறவுக் கொள்கைகளைக் கடைப்பிடித்தார். பிஸ்மார்க்கின் சாதுரியமே 1870, 90களில் ஐரோப்பாவில்  அமைதியைப் பேணியது. இருபெரும் அணிகளுக்கிடையேயான போரொன்று உருவாகிவிடாமலிருக்க முக்கியச் சக்தியான பிரான்சைத் தனிமைப்படுத்தினார் பிஸ்மார்க். ஆஸ்திரியா, ரஷ்யா, ஜெர்மனி அடங்கிய, முப்பேரரசர் அணியை 1873இல் உருவாக்கினார்.  பால்கன் பகுதியை அடையும் நோக்கத்தில் ஆஸ்திரியாவும், ரஷ்யாவும் எதிரிகளாக இருந்த நிலையில், அப்பிரச்சனைகளின் அடிப்படையில் ரஷ்யா விலக, அவர்களுக்கிடையில் தான் நேர்மையான தரகராக இருப்பதாக உறுதியளித்து, 1878இல் பெர்லின் பாராளுமன்றம் என்ற பேச்சுவார்த்தையை நடத்தினார். ரஷ்யா ஒத்துவராத நிலையில், 1879இல் ஆஸ்திரியாவுடன் அவர் உருவாக்கிய இருநாட்டுக்கூட்டு, ஜெர்மன் அயலுறவுக்கொள்கையின் அடிக்கல் என்று புகழப்படுவதுண்டு. பெருமுயற்சியெடுத்து, 1881இல் முப்பேரரசர் அணியை மறுவுருவாக்கம் செய்தாலும், 1885-87இல் ஏற்பட்ட பல்கேரியச் சிக்கல், ரஷ்ய-ஆஸ்திரிய விரோதத்தை தீவிரப்படுத்தியது. பிரான்ஸ் ஆதரவு நிலையை ரஷ்யா மேற்கொண்டுவிடக்கூடிய நிலையில் பிஸ்மார்க் உருவாக்கிய இந்த ரகசிய ஒப்பந்தம், அந்நிய உறவுகளைக் கையாள்வதில் அவருக்கிருந்த திறமையின் ‘தலைசிறந்த வெளிப்பாடு (மாஸ்டர்பீஸ்)’ என்று வருணிக்கப்படுகிறது. 1890இல் ஆட்சிக்குவந்த இரண்டாம் கெய்சர் வில்லெம் அரசர் தொடக்கத்திலேயே இந்த ஒப்பந்தத்தை மீறி, பிஸ்மார்க் பதவி விலகினார். இந்த ஒப்பந்தத்தின் முடிவே, அதுவரை ஐரோப்பியக் கண்டத்தில் பிஸ்மார்க் கட்டிக் காத்த அதிகாரச் சமநிலை முடிவுக்கு வருவதற்குக் காரணமாக மட்டுமின்றி, பின்னாளில் முதல் உலகப்போர் ஏற்படுமளவுக்கான பிரச்சனைகளுக்குமான தொடக்கப்புள்ளியாகவும் அமைந்தது. (மக்கள்நல அரசுக்குப் போர்கள் இடையூறு என்று கருதி, சிறப்பான அயலுறவுக் கொள்கையை உருவாக்கி மக்கள்நல நடவடிக்கைகளை பிஸ்மார்க் மேற்கொண்டார் என்பது, போர் தொடுப்பதுதான் வல்லரசு என்ற கூக்குரல் நிலவும் இக்காலத்தில் கவனிக்கத்தக்கது!)