tamilnadu

img

இந்நாள்... இதற்கு முன்னால்...

1961 - ‘ஐம்பது லட்சம் பேரைக் கொன்ற அரிய மகிழ்ச்சி யோடு, சிரித்துக்கொண்டே கல்லறைக்குள் குதிப்பேன்’ என்று கூறிய அடால்ஃப் ஈச்மேனுக்கு, இஸ்ரேலின் ஜெருச லேம் மாவட்ட நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. எஸ்டி என்றழைக்கப்பட்ட ஜெர்மானிய பாதுகாப்புப்படையில் பணியாற்றிய ஈச்மேன், நாஜிகளால் நடத்தப்பட்ட பெரும் இன அழிப்பு என்னும் யூதப் படுகொலைகளை முன்னின்று நடத்தியவர்களில் முக்கியமானவர். பெரும் இன அழிப்பில், ஹிட்லர், அதனை வடிவமைத்த ஹீன்ரிச் ஹிம்லர், செயல்படுத்தியதில் முக்கியப் பங்காற்றிய ரீன்ஹார்ட் ஹேட்ரிச் ஆகியோருக்கு அடுத்து, மிகப்பெரிய அளவில் யூதர்களை படு கொலை முகாம்களுக்கு அனுப்பிய இவர்தான் முக்கியமானவர்.  நாஜிக் கட்சியிலும், எஸ்எஸ் படையிலும் 1932இல் சேர்ந்த இவர், 1933இல் எஸ்டி படையின், யூதர்களை ‘வெளியேற்றும்’ பிரிவுக்குத் தலைவராக்கப்பட்டார். வன்முறைகள், பொருளாதார நெருக்கடிகளை உருவாக்குதல், சமூகப் புறக்கணிப்பு(நம் ஊர் கட்டப்பஞ்சாயத்தாரின் ஊரைவிட்டு விலக்குதல் இவ்வகைதான்!) ஆகியவற்றின்மூலம், யூதர்களை நாட்டைவிட்டே வெளியேற்றுவதைத்தான், ஹிட்லர் சான்சலரான 1933இலிருந்து நாஜி அரசு செய்தது.

1941இல் சோவி யத்தின்மீது ஜெர்மனி படையெடுத்தபோது, செஞ்சேனைக்கு உதவிய 5 லட்சத்துக்கும் அதிகமான சோவியத் யூதர்களைக் கொன்றபோது தான்,  இரண்டு நூற்றாண்டுகளாக விவாதிக்கப்பட்டுக்கொண்டிருந்த ‘யூதக் கேள்வி’க்கு, யூதர்களை அழித்தொழிப்பதுதான் இறுதித் தீர்வு என முடிவெடுத்து, இனப் படுகொலையை நாஜிகள் தொடங்கினர். அர சியல் கைதிகள் முகாம்கள்(கான்சண்ட்ரேஷன் கேம்ப்), அழித்தொ ழிப்பு முகாம்கள் ஆகியவற்றுக்கு யூதர்களை அனுப்பும் பணியினை ஈச்மேன் மேற்கொண்டார்.

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் தோல்விக்குப்பின் அமெரிக்க ராணுவத்திடம் பிடிபட்ட ஈச்மேன், தப்பிச் சென்று அர்ஜெண்டினாவில் வாழ்ந்தார். போருக்குப்பின் நாஜிகள் பற்றிய தகவல்களைத் திரட்டித்தரும் பணியிலிருந்த ‘நாஜி வேட்டைக் காரர்களில்’ ஒருவரால் ஈச்மேனின் இருப்பிடம் அடையாளம் காட்டப் பட, இஸ்ரேலின் உளவு, சிறப்பு நடவடிக்கைகள் அமைப்பு(மொசாத்) அவரைப் பிடித்தது. மனிதகுலத்துக்கெதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள் உள்ளிட்ட 15 குற்றச்சாட்டுகளின்பேரில் நடைபெற்ற விசா ரணையில், அழித்தொழிப்பு முகாம்களுக்கு யூதர்களை அனுப்பி யதை ஈச்மேன் மறுக்கவில்லை. லட்சக்கணக்கானோரைக் கொலை செய்ததற்காகச் சிறிதும் வருத்தப்படாத ஈச்மேன், எந்த முடிவையும் அவர் எடுக்கவில்லையென்றும், அவருக்கு இடப்பட்ட உத்தரவுகளை மட்டுமே நிறைவேற்றியதாகவும் வாதிட்டார். மாவட்ட நீதிமன்றத்தின் மரண தண்டனைக்கெதிரான அவரது மேல்முறையீட்டினை இஸ்ரேல் உச்சநீதிமன்றமும், கருணை மனுவை குடியரசுத்தலைவரும் தள்ளு படி செய்ததையடுத்து, 1962 ஜூன் 1 அதிகாலையில் தூக்கிலிடப் பட்டார்.

- அறிவுக்கடல்