tamilnadu

இந்நாள் ஜுன் 06 இதற்கு முன்னால்

1523 - ஸ்வீடனின் அரசராக கஸ்டவ் வாசா தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நாளே ஸ்வீடனின் தேசிய நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. பழைய கற்காலத்திலேயே, இப்பகுதியில் மனிதர்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. ஸ்வீடன் பற்றிய முதல் குறிப்பு, கி.பி.98இல்  டாசிட்டஸ் எழுதிய ஜெர்மானியாவில் காணப்படுகிறது. ஸ்வியோன்ஸ் என்ற சக்திவாய்ந்த பழங்குடியினர் வசித்ததாக அவர் குறிப்பிடுகிறார். சக்திவாய்ந்த என்றால் ஆயுதங்களில் மட்டுமின்றி, நீண்ட பயணங்களை மேற்கொள்ள உதவும் சிறந்த கப்பல்களையும் கொண்டிருந்தனர். பின்னாளில் கடற்பயணங்களில் சிறந்து விளங்கிய வைக்கிங்குகள், ஸ்வீடனையும் உள்ளடக்கிய ஸ்காண்டிநேவியப் பகுதியைச் சேர்ந்தவர்கள்தான். இப்பகுதியில் பேசப்பட்ட தொடக்ககால நோர்ஸ் மொழியிலிருந்தே ஸ்வீடிய மொழி உருவானது. கி.பி.8இலிருந்து 11வரையான நூற்றாண்டுகள் ஸ்வீடனில் வைக்கிங் காலமாக விளங்கியது. வடக்கில் பால்டிக் பகுதியைநோக்கி விரிவாக்கம்செய்து வந்துகொண்டிருந்த ஜெர்மானியர்களைத் தடுக்கும் நோக்கில் டென்மார்க், நார்வே, ஸ்வீடன் இணைந்த கல்மார் ஒன்றியம் 1397இல் உருவானது. ஸ்வீடன், நார்வே ஆகியவற்றின் அரசராக இருந்த ஆறாம் ஹாக்கோன், டென்மார்க் அரசரின் மகளான மார்க்கரெட்டை 1363இல் மணந்தார். மார்க்கரெட் முயற்சியில்தான் கல்மார் ஒன்றியம் உருவானது. கல்மார் ஒன்றியத்தை வலுவான முடியரசாக உருவாக்க அதன் அரசர்கள் முயற்சித்தாலும் டென்மார்க், ஸ்வீடன் நாடுகளின் பிரபுக்கள் தங்கள் அதிகாரங்களை விடத் தயாராக இல்லை. 1520இல் இரண்டாம் கிறிஸ்டியன் அரசரானதும், ஒன்றியத்துக்கு எதிரான 100 பேருக்கு மரணதண்டனை வழங்கப்பட்ட ஸ்டாக்ஹோம் இரத்தக்களரி அரங்கேறியது. இதைத் தொடர்ந்து, 1521இலிருந்து நடைபெற்ற விடுதலைப்போரில் ஸ்டாக்ஹோம் கைப்பற்றப்பட்டதும், ஸ்வீடன் விடுதலை பெற்றதாக அறிவிக்கப்பட்டு, தளபதியான கஸ்டவ் வாசா அரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூன் 6 ஸ்வீடனின் தேசிய நாளாக 1983இல் அறிவிக்கப்பட்டது. டச்சு மொழியிலிருந்து வந்ததாகக் கூறப்படும் ஸ்வீடனின் பெயர், ஆங்கிலத்தில், ஸ்வியோன்ஸ் என்பதிலிருந்து உருவான, ஸ்வீட்ஸின் மக்கள் என்ற பொருள்கொண்ட ஸ்வீயோபியோட் என்றும், பின்னர் ஸ்வீட்லேண்ட் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் என்ற பெயர் 17ஆம் நூற்றாண்டில்தான் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.

-அறிவுக்கடல்