tamilnadu

img

இந்நாள் ஜுலை 17 இதற்கு முன்னால்

1762 - மூன்றாம் பீட்டர் கொலை செய்யப்பட்டதையடுத்து, அவர் மனைவி இரண்டாம் கேத்தரீன் ரஷ்யாவின் ஜார்(பேரரசர்) ஆனார். கேத்தரீனிய சகாப்தம் என்றழைக்கப்படும் இவரது ஆட்சிக்காலமான 1762-96தான் ரஷ்யாவின் பொற்காலம் என்று போற்றப்படுகிறது. முடிசூடி ஆறு மாதமே ஆகியிருந்த தன் கணவர் மூன்றாம் பீட்டரின் ஆட்சியைக் கவிழ்த்தவரே கேத்தரீன்தான் என்றாலும், பீட்டரின் கொலையில் அவருக்குத் தொடர்பில்லை என்று கூறப்படுகிறது. மோசமான ஜார் என்று குறிப்பிடப்படும் மூன்றாம் பீட்டரின் ஆறுமாத ஆட்சிக் காலத்திலேயே மதச் சுதந்திரம், கல்விக்கு முக்கியத்துவம், ராணுவ நவீனமயம் உள்ளிட்ட பல முற்போக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதால், சிறந்த ஜாராக ஆண்டிருக்கவேண்டியவரை, நிலப்பிரபுக்கள் சதிசெய்து கவிழ்த்ததாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. அதற்கேற்ப, ரஷ்யாவிலிருந்த பண்ணையடிமைகளின்(பணிசெய்யும் நிலத்தோடு பிணைக்கப்பட்ட இவர்கள், நிதி சேர்த்து தங்களை விடுவித்துக்கொள்ள முடியுமென்பதால் முழுமையான அடிமைகள் அல்லர்) நிலை கேத்தரீனின் ஆட்சிக்காலத்தில் மேலும் மோசமானது. ரஷ்ய அறிவொளிக்காலத்தின் முன்னோடியாகக் குறிப்பிடப்படும் கேத்தரீன், கல்வி, பண்பாட்டு வளர்ச்சிக்கு முக்கியத்துவமளித்தாலும், பண்ணையடிமைகளின் நன்மைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால் பெருநிலப்பிரபுக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாது என்று உணர்ந்ததும் அவற்றில் தலையிடவேயில்லை.

அதனால் ரஷ்ய வரலாற்றின் மிகப்பெரிய விவசாயிகள் போராட்டமான புகாச்சேவ் கலகமும் இவரது ஆட்சிக்காலத்தில்தான் நடைபெற்றது. கேத்தரீனின் ஆட்சிக்காலத்தில் போர் வெற்றிகளின்மூலமாகவும், சுமுக உறவுகளின்மூலமாகவும், ரஷ்யாவின் நிலப்பரப்பு மிகப்பெரிய அளவில்(5.18 லட்சம் ச.கி.மீ.) விரிவாக்கம்பெற்றது.  அவரது ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் ஐரோப்பாவின் மிகப்பெரும் சக்திகளுள் ஒன்றாக ரஷ்யாவை முதன்முறையாக உயர்த்தினாலும், பொருளாதார முன்னேத்தின் பலன்கள், நிலப்பிரபுத்துவ வர்க்கத்தினருக்கு மட்டுமே பயன்பட்டன. இசை, நடனம், தையல் போன்றவை மட்டுமே பெண்களுக்கு போதிக்கப்பட்ட அக்காலத்தில், ஸ்மோல்னி இன்ஸ்ட்டிடியூட் என்ற பெண்களுக்கான முதல் உயர்கல்வி நிலையத்தை அரசு நிதியில் தொடங்கிய கேத்தரீன் சட்டம், அறிவியல், கணிதம், பொருளாதாரம், கட்டிடக்கலை உள்ளிட்டவற்றில் பெண்களுக்குக் கல்வியளித்தார். முதல் பொது நூலகம், ஏராளமான கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றைத் தொடங்கியதுடன், தான் சேகரித்து வைத்திருந்த பொருட்களைக்கொண்டு கேத்தரீன் 1764இல் தொடங்கிய ஹெர்மிட்டேஜ் அருங்காட்சியகம் உலகின் மிகப்பெரிய, மிகப்பழைமைவாய்ந்த அருங்காட்சியகங்களுள் ஒன்றாக விளங்குகிறது. ரஷ்யாவின் முதல் பணத்தாள்களையும் வெளியிட்டவரான கேத்தரீன்தான், ரஷ்யாவை நீண்டகாலம் ஆட்சிசெய்த பெண் ஜார். ரஷ்ய வரலாற்றில் மகா(தி கிரேட்) என்றழைக்கப்படுகிற மூன்றே அரசர்களில், மகா இவான்(மூன்றாம் இவான்), மகா பீட்டர்(முதலாம் பீட்டர்) ஆகியோருடன், கேத்தரீனும் மகா கேத்தரீன் என்றழைக்கப்படுகிறார்.

-அறிவுக்கடல்