tamilnadu

img

டைட்டானிக்கும் கியூபாவும் - ஆய்வாளர் ஷேக் ஃபயாஸ்

2015 செப்டம்பர் 26 அன்று கியூபா தலைநகர் ஹவானா ஒரு புத்தாக்க மாநாட்டை நடத்திக்கொண்டிருந்தது. (உலகப் பொருளாதார முன்னேற்றத்திற்கான ஆராய்ச்சி மையமாகிய) ‘குளோபெலிக்ஸ்’ நிறுவனத்தின் முன்முயற்சியில் நடைபெற்ற அந்த மாநாட்டில் 40க்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 200 ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றார்கள். மாநாட்டின் விவாதப் பொருள் “அனைவரையும் உள்ளடக்கிய நிலைத்திருக்கும் முன்னேற்றத்திற்காக வறுமையையும் சமத்துவமின்மைகளையும் குறைப்பதற்கான புத்தாக்கம்” என்பதாகும். மாநாடு முடிந்தபின் கியூப அரசு பங்கேற்பாளர்கள் அனைவரையும் மூலக்கூறுசார் நோயெதிர்ப்பியல் மையத்தைப் (சிஐஎம்) பார்வையிட அழைப்பு விடுத்தது. 2011ல் சிமா வேக்-இஜிஎஃப் என்ற நுரையீரல் புற்றுநோய்த் தடுப்பு மருந்தை முதன் முதலாக வெளியிட்ட ஆய்வு மையம் சிஐஎம்.

மூழ்கத் தொடங்கிய தருணத்தில்...

மாநாட்டுப் பங்கேற்பாளர்கள் பெரும்பாலோர் மனங்களிலும் ஓடிய ஒரே கேள்வி இதுதான்: வரலாற்றிலேயே மிக நீண்ட பொருளாதாரத் தடையை எதிர்கொண்டபோதிலும் இப்படி அனைவரையும் உள்ளடக்கும் வகையிலும் புத்தாக்கத்தோடும் தனது சுகாதாரத் துறையையும் கல்வித்துறையையும் கியூபாவால் விரிவான முறையில் வளர்த்தெடுக்க முடிந்தது எப்படி? இந்தக் கேள்விக்குச் சிறப்பான முறையில் பதிலளித்த சிஐஎம் தலைமை அறிவியலாளர், உலக அளவில் பெரும் வெற்றிபெற்ற ‘டைட்டானிக்’ திரைப்படத்தின் ஒரு காட்சியை எடுத்துக்காட்டாகக் கூறினார்.

கடலுக்குள் ஒரு பனிப்பாறையில் மோதிய டைட்டானிக் கப்பல் மூழ்கத் தொடங்குகிறது. அப்போது இசைக் குழுவினர், உயிர்காப்புப் படகுகள் பற்றியோ பாதுகாப்பு அங்கிகள் பற்றியோ கவலைப்படாமல் பயணிகளுக்காகத் தொடர்ந்து இசை வாசித்துக்கொண்டிருப்பார்கள். அவர்களுடைய அணுகுமுறைக்கு நேரெதிரானது கியூபா சுகாதார அமைப்பின் வளர்ச்சிக்குப் பின்னால் உள்ள தத்துவம் என்றார் தலைமை அறிவியலாளர்.

மூழ்கும் கப்பலைக் காப்பதற்குமான முயற்சிகளிலும் ஈடுபடாமல் பயணிகளைக் களிப்படையச் செய்வதற்குக் கியூப மருத்துவர்களும் அறிவியலாளர்களும் உண்மையாகவே மறுத்துவிடுவார்கள் என்றார் அவர். மாறாக அவர்கள் கப்பலின் அடித்தளத்திற்கு விரைந்து சென்று அது மூழ்குவதைத் தடுக்கும் முயற்சியில் பங்களித்திருப்பார்கள். வலுமிக்கதொரு செயல்முறை இல்லாத நிலையில் “களிப்பூட்டுவது” என்பது பொருளற்றதே என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த 2020 கொரோனா தாக்கம் உலகத்தின் சுகாதார அமைப்பையே சீர்குலைவில் தள்ளிவிட்டுள்ளது. எல்லாமே தகர்ந்துகொண்டிருப்பது போலத் தோன்றுகிறது. அரசுகளின் அதிகார பீடங்களில் இருப்போர் பொய் சொல்கிறார்கள், மறுபடியும் அவர்களது செயற்தகுதியின்மையும் ஊழல் அழுகலும் அப்பட்டமாக வெளியே தெரிகின்றன. மருத்துவமனைகள் மிக அதிகமான நோயர்களால் நிரம்பி வழிகின்றன. மருத்துவர்களுக்கு அடிப்படை சிகிச்சைக் கருவிகளும் பாதுகாப்புக் கவசங்களும் கட்டாயமாகத் தேவைப்படுகின்றன.

அந்த ‘டைட்டானிக்’ பயணிகள் போலவே எல்லோரும் உயிர்காப்பு அங்கிகளுக்காக அல்லாடுகிறார்கள். இன்றைய கோவிட்-19 நெருக்கடியில்,  உச்சத்தில் இருக்கிற பெரியதோர் உடனடிச் சிக்கல் எதுவெனில் நமது கொள்கைகளை உருவாக்கும் இடத்தில் இருப்பவர்கள் அதே பழைய இசை வாசிப்பையும், ஆரவாரச் சொற்களையுமே சார்ந்திருக்கிறார்கள் என்பதுதான். இந்த இரண்டில் எதுவொன்றுக்கு மக்கள் இரையாவார்களானாலும் அது கடுமையானதொரு பிழையாகிவிடும்.

‘டைட்டானிக்’ மூழ்கியது போன்ற இன்றைய சூழலில், பயணிகள் என்ற முறையில் நம் முன் இருக்கிற வழிகள்தான் என்ன? நாம் செய்தாக வேண்டியது என்ன? குறை சொல்லிக்கொண்டு, மாசுபட்ட இந்த அமைப்போடு அனுசரித்துக்கொள்வதைத் தொடரப் போகிறோமா – மூழ்கிக்கொண்டிருக்கிறோம் என்று தெரிந்தே? சலிப்பூட்டும் களிப்பாட்டக்காரர்களால் முட்டாளாக்கப்படுவதற்கு மீண்டும் நம்மை நாமே அனுமதித்துக்கொள்ளப் போகிறோமா? இதற்கு மற்றொரு மாற்று, குறைந்த அளவே உள்ள உயிர்காப்பு அங்கிகளுக்காகப் போராடுவது. அது அனைவருக்குமான பாதுகாப்பை உறுதிப்படுத்திவிடாது என்பது நமக்குத் தெரியும். அப்படியானால், மூழ்கும் கப்பலைக் காப்பதற்குச் செயலாக்கமுள்ள தீர்வுதான் என்ன?

இப்போது நம் முன்னால் இருக்கிற மிகச் சிறந்த வழி, நமது யோசனைகளைத் திரட்டிச் சேர்ப்பதும், தற்சார்புள்ள, தகர்க்கவியலாத, மனிதகுலத்துக்கே பொதுவான, உயிர்காக்கும் அமைப்பொன்றை நிலைநாட்டுவதே என்று நான் நம்புகிறேன். நாம் தனித்துவமான தீர்வுகளைக் கண்டாக வேண்டும், கற்பனையாற்றலோடு சிந்தித்தாக வேண்டும், புத்தாக்கத்தோடு பங்களித்தாக வேண்டும். கூட்டு ஞானம் படைப்பாக்கத் திறனோடு முறைப்படுத்தப்படுமானால் நிச்சயமாகக் கப்பலைக் காக்க உதவும். இறுதியாக, எதைத் தேர்வு செய்கிறோம் என்பது நம் கையில்தான் இருக்கிறது: ஒன்று நமக்குப் பெருங்கேடாக இந்தக் களிப்பாட்டக்காரர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கலாம், அல்லது அர்த்தமுள்ள முறையில் பங்களித்து உயிர்களைக் காப்பாற்றலாம்.

கட்டுரையாளர் காஷ்மீரின் குப்வாரா நகரைச் சேர்ந்தவர். இந்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் தேசிய புத்தாக்க நிறுவனம் (என்ஐஎஃப்) உள்ளிட்ட அமைப்புகளில் பணியாற்றியவர். தற்போது சீனாவின் ஜேஜியாங் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கிறார். ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவருகிறார்.

தமிழில்: அ.குமரேசன்