tamilnadu

img

இந்நாள் நவ. 21 இதற்கு முன்னால்

1969 - ஒக்கினாவா ப்ரிஃபெக்ச்சர் பகுதியை 1972இல் ஜப்பானிடம் ஒப்படைப்பதாக, ஜப்பானியப் பிரதமர் எய்சாக்கு சாட்டோ உடனான பேச்சுவார்த்தையில், அமெரிக்கக் குடியரசுத்தலைவர் ரிச்சர்ட் நிக்சன் ஒப்புக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது. வியட்னாம் போரில் வீசுவதற்காக இங்கு சேமிக்கப்பட்டிருந்த வேதியியல் ஆயுதங்களில் கசிவு ஏற்பட்டதையடுத்து ஏற்பட்ட மிகப்பெரிய எதிர்ப்பியங்களால் அமெரிக்கா இந்த முடிவை எடுக்க வேண்டியதாயிற்று. ரியூக்யூ தீவுக்கூட்டத்தைச் சேர்ந்த ஒக்கினாவாவை, இரண்டாம் உலகப்போரின் முடிவில் அமெரிக்கப்படைகள் கைப்பற்றின. அந்நடவடிக்கையின்போது, ஒக்கினாவாவின் மூன்றிலொரு பங்கு மக்கள் பலியாயினர்.

(1995இல் எழுப்பப்பட்ட நினைவிடத்தில் 2,40,734 பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன!) உலகப்போரில் ஜப்பானின் தோல்வியைத் தொடர்ந்து, அமெரிக்காவின் காப்பாட்சியின்கீழ் வந்த இப்பகுதிக்காக, ரியூக்யூ தீவுகளுக்கான அமெரிக்க ராணுவ அரசு என்பது உருவாக்கப்பட்டது. கொரியப்போரின்போது, அமெரிக்க ராணுவத்தின் தளமாகச் செயல்பட்ட இப்பகுதியில், சோவியத்துடனான பனிப்போர்க் காலத்தில் ஏராளமான அமெரிக்க ராணுவம் குவிக்கப்பட்டது. இக்காலகட்டத்தில் ஒக்கினாவா மக்களின் நிலங்களை அமெரிக்க ராணுவம் தளங்கள் அமைப்பதற்காகப் பிடுங்கிக்கொண்டதுடன், சுமார் 2.5 லட்சம் பேர் வேறிடங்களுக்கு விரட்டப்பட்டனர். இக்காலகட்டத்தில், அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் ஜப்பான் கையெழுத்திட்டதையடுத்து, ஜப்பானுக்கான அமெரிக்கப் படைகள் என்ற பிரிவே அமெரிக்க ராணுவத்தில் ஏற்படுத்தப்பட்டு, ஏராளமான படைகள் இங்கு குவிக்கப்பட்டன. ஜப்பானின் ரகசிய ஒப்புதலுடன் ஏராளமான அணு ஆயுதங்களும் இப்பகுதியில் குவிக்கப்பட்டன. வியட்னாம் போரின்போது, அருகாமை பகுதி என்ற வகையில் தாக்குதலுக்கான முக்கிய மையமாக இது மாற்றப்பட்டது.

பசிபிக் பகுதியின் முக்கியத் தளம் என்று இதனை அமெரிக்கப் பாதுகாப்புத்துறை குறிப்பிட்டுக்கொள்ளுமளவுக்கு மாறிப்போன நிலையில், அமெரிக்கா நுழைந்தபோதே உருவாகியிருந்த ரியூக்யூ விடுதலை இயக்கம் உச்சத்தை அடைந்தது. வேதியியல் ஆயுதங்களின் கசிவு பற்றிய செய்திகள் பரவலான எதிர்ப்புகளை உருவாக்கிய நிலையில்தான், ஒக்கினாவாவை ஜப்பானிடம் திருப்பியளிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டு, 1972இல் நிறைவேற்றியது. தங்கள் கட்டுப்பாட்டிலிருந்தபோது, தங்கள் சொத்தைப்போல அனைத்தையும் அமெரிக்கா மாற்றியிருந்தது. அமெரிக்கப் பாணி வலப்புறப் போக்குவரத்து, 1978இல் இடப்புறப்போக்குவரத்தாக மாற்றியமைக்கப்பட்ட செய்தி இத்தொடரில் 2018 ஜூலை 30இல் வெளியானது. அமெரிக்கா வெளியேறிவிட்டதாகக் கூறிக்கொண்டாலும், ஜப்பானின் நிலப்பரப்பில் வெறும் அரை சதவீதமேயுள்ள ஒக்கினாவாவில்தான், ஜப்பானிலுள்ள அமெரிக்கப் படைகளில் 75 சதவீதம் இன்றும் நிறுத்தப்பட்டுள்ளன.

1972இலிருந்து 2009வரை பாலியல் வன்புணர்வு, கொலை, திருட்டு உள்ளிட்ட 5,394 குற்றங்களை, ஒக்கினாவா மக்களுக்கெதிராக அமெரிக்கப் படைகள் செய்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

- அறிவுக்கடல்