tamilnadu

img

கோவிட்19 தடுப்பு கூட்டத்திற்காக திருமணத்தை தள்ளி வைத்த பிரதமர்

கோவிட் 19 தடுப்பு கூட்டத்திற்காக டென்மார்க் பிரதமர் தனது திருமணத்தை தள்ளி வைத்துள்ளார். 
டென்மார்க்கில் இதுவரை கொரோனா தொற்றால் 12,836 பேர் பாதிக்கப்பட்டனர். 603 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அங்கு கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் பல கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரலில் டென்மார்க் கட்டுப்பாடுகளை சிறிது சிறிதாக  தளர்த்தியது. 
இந்நிலையில் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில், வரும் ஜூலை 17ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு பின்னர் முதன்முறையாக ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த தலைவர்கள் நேரடியாக சந்தித்து, ஐரோப்பிய பட்ஜெட் மற்றும் கொரோனா நெருக்கடியில் இருந்து மீள்வது தொடர்பாக ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர். 
இந்நிலையில் டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் தனது வருங்கால கணவர் போடெங்பெர்க் புகைப்படத்தை பகிர்ந்து நான் இவரைத்தான் திருமணம் செய்து கொள்ள உள்ளேன். வரும் ஜூலை சனிக்கிழமையன்று பிரஸ்ஸல்ஸில் கவுன்சில் கூட்டம் நடக்கும் அதே நாளில் எங்கள் திருமணம் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், நான் எனது வேலையைச் செய்ய வேண்டும் மற்றும் டென்மார்க்கின் நலன்களை பாதுகாக்க வேண்டும். போவுக்கு 'ஆம்' என்று சொல்ல ஆவலுடன் காத்திருக்கிறேன்' என பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு டென்மார்க்கின் இளம் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் இடது சோசலிச ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 கடந்த ஆண்டு கிரீன்லாந்தை வாங்க விரும்புவதாக ட்ரம்ப் கூறிய போது இந்த யோசனை மிகவும் அபத்தமானது என்று மெட்டே கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.