tamilnadu

img

ஐ.எஸ். அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதாக தகவல்

டமாஸ்கஸ், அக். 28- சிரியாவின் வடக்குப்பகுதியில் அமெரிக்க வீரர்கள் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் அல்- பக்தாதி கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நியூஸ் வீக் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தியில், சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் அமெரிக்க  சிறப்பு அதிரடிப்படையினர் திடீர் தாக்குதல் நடத்தி அல்- பக்தாதியை கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி உண்மையெனில், பாகிஸ்தானில் அல்-கொய்தா தலைவர் பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு  அமெரிக்க படையினரால் கொல்லப்பட்ட 2ஆவது மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பின் தலைவராக பக்தாதி கருதப்படுவார் என ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு, ஆளும் அரசுக்கு எதிரான தீவிரவாத வன்முறைகளில் ஈடுபட்டு வந்தது. ஒசாமா பின்லேடனுக்கு அடுத்து மிகப் பெரிய  தீவிரவாத இயக்கத் தலைவனாக அறியப்பட்ட அபு பக்கர் அல் பக்தாதி கொடூரமான வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வந்த நபர். குண்டுவெடிப்புகள், தாக்குதல்களில் மத்திய கிழக்கு நாடுகளில் ஏராளமானோர் உயிரிழக்க காரணமாக இருந்த நபர் பக்தாதி. 2010ம் ஆண்டு முதல் ஐ.எஸ். இயக்கத்தின் தலைவராக செயல்பட்டு வந்தார்.  அபுக்கர் பக்தாதி கொல்லப்பட்டதாக தகவல் உலகம் முழுவதும் ஊடகங்களில் கசிந்த நிலையில், அமெரிக்க  ஜனாதிபதி டிரம்ப் தமது டுவிட்டர் பதிவில் அபுபக்கர் பக்தாதி ஒருநாயைப் போல் கொல்லப்பட்டான் என்று அறிவித்தார். அமெரிக்க கூட்டுப் படைகள் சிரியாவின் பரிஷா பகுதியில், பாக்தாதி மறைந்திருந்த ஒரு வீட்டை  முற்றுகையிட்டு குண்டுகளை வீசிய போது உயிருக்கு அஞ்சி ஒரு கோழையைப் போல தப்பி ஓட முயற்சி த்ததாகவும் சுரங்கம் வழியாக தப்ப முயற்சித்ததாகவும் அது நிறைவேறாததால் தமது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தமது மூன்று குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.