tamilnadu

img

நியூயார்க்கில் மட்டும் 23 ஆயிரம் பேர் பலி

டிரக்குகளில் அழுகிய நிலையில் சடலங்கள்

கொரோனா பரவலால் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 2.35 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். 34 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்படைந்து இருக்கின்றனர். 

இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரசின் தொற்று மையமாக நியூயார்க் மாகாணம் உள்ளது. அங்குதான்  அதிகபட்ச எண்ணிக்கையிலானவர்களை  வைரஸ் தாக்கியுள்ளது. பிற இடங்களை விட இங்குதான் உயிர்பலியும் அதிகம்.  நியூயார்க் நகரில் மட்டும் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 23 ஆயிரம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் சுமார் 1,500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்து வருகின்றனர். நியூயார்க்கில் சனிக்கிழமை மட்டும் 299 பேர் உயிரிழந்துள்ளனர். நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ இதை கெட்ட செய்தி என்றதோடு எண்ணிக்கை என்னை திகிலூட்டுகிறது என்கிறார்.

இந்நிலையில், நியூயார்க்கின் புரூக்ளின் பகுதியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் இடத்தில்  இரண்டு டிரக்குகளில் நூற்றுக்கணக்கான சடலங்கள் இருந்ததாகவும் அதிலிருந்து துர்நாற்றம் வீசியதாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்ததாக  ஏபிசி செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

இறந்தவர்களின் உடல்களோடு லாரிகள் நியூயார்க் நகர சாலைகளில் நின்றுகொண்டிருக்கின்றன. கொரோனாவில் உயிரிழந்திருந்தாலும் சரி, மற்ற நோயால் இறந்திருந்தாலும் சரி, இறுதி நிகழ்ச்சிகளை நடத்த நியூயார்க் நகரம் போராடி வருவதாக நியூயார்க் டைம்ஸ் செய்தியை மேற்கோள்காட்டி பிபிசி செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.