உலகிலேயே முதல்முறையாக மக்களின் நல்வாழ்வை நாட்டின் வளர்ச்சிக்கான அளவீடாக பயன்படுத்தும் நாடு நியூஸிலாந்து என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
உலகில் உள்ள சில நாடுகளை தவிர அனைத்து நாடுகளும் தங்களின் வளர்ச்சியை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியையும், அந்நிய செலாவணியின் அதிகரிப்பையுமே கொண்டு அளவீடு செய்து வருகின்றன. ஆனால், தற்போது நியூஸிலாந்து நாடு மக்களின் நல்வாழ்வை தனது நாட்டின் வளர்ச்சிக்கான அளவீடாக பயன்படுத்தும் என அறிவித்துள்ளது. உலகிலேயே முதல்முறையாக மக்களின் நல்வாழ்வை நாட்டின் வளர்ச்சிக்கான அளவீடாக பயன்படுத்தும் நாடு நியூஸிலாந்து என அந்நாட்டு நிதி அமைச்சர் கிராண்ட் ராபர்ட்சன் அறிவித்துள்ளார்.
வறுமையில் உள்ள குழந்தைகள், உள்நாட்டு கலவரம் மற்றும் மக்களின் மன ஆரோக்கியம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தற்போது நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு நிதி அமைச்சர் கூறியுள்ளார். மேலும், நியூஸிலாந்து சிறப்பான பொருளாதார வளர்ச்சியை கொண்டிருந்தாலும் பல மக்கள் இந்த வளர்ச்சியில் இருந்து வெளியே இருக்கிறார்கள் எனவும், தற்கொலை விகிதம், வீடற்ற நிலை மற்றும் உணவு ஆகியவற்றில் இன்னும் வளர்ச்சியற்ற நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். வருகின்ற மே மாதம் 30ம் தேதி நியூஸிலாந்து இந்தாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளது. மக்களின் நிலையில் சமநிலையை கொண்டு வரக்கூடிய வகையிலான நிதிநிலை அறிக்கையாக இது இருக்கும் எனவும் ராபர்ட்சன் தெரிவித்தார்.