நிலப்பரப்பில் உலகிலேயே மிகப்பெரிய நாடாகும் உருசியா. உருசிய மொழி உலகமொழிகளில் சிறப்பிடம்பெறாத ஒன்றாக இருந்தது. உலகில் புதுமலர்ச்சி உண்டாக்கியஅக்டோபர் புரட்சியின் ( தற்போது நவம்பர் புரட்சி) ஆணிவேராக விளங்கிய லெனின் , உருசிய மொழியை உலகின் தலைசிறந்த மொழிகளுள் ஒன்றாக தமது 30 ஆண்டுகால உழைப்பால், பேச்சால், எழுத்தால் உயர்த்தினார் . அவரது வியத்தகு செயலை எண்ணும்போது ,
"விழிப்போரே நிலை காண்பார் / விதைப்போரே அறுத்திடுவார் / களைகாண் தோறும் / அழிப்போரே அறம்செய்வார் / அறிந்தோரே உயர்ந்திடுவார் " என்ற பாவேந்தரின் பாடல் வரிகளே நினைவுக்கு வருகின்றன .
உருசிய மொழியின் உயர்வுக்கும் வளத்திற்கும் செம்மைக்கும் செழுமைக்கும் உழைத்த லெனின் ஒலியாய் மட்டும் வாழ்ந்து கொண்டிருந்த சோவியத்தின் பல மொழிகளுக்கும் உருவம் தந்தார். வாயும் செவியும் மட்டுமே இருந்த மக்களுக்குக் கண்களைத் தந்ததோடு கருத்தையும் தந்து அதனை மலையூற்றாய்ப் பெருகச் செய்தார். ஆனால் எந்த ஒரு மொழியினர் மீதும் தம் தாய்மொழியாகிய உருசிய மொழியை அவர் திணிக்கவில்லை. காட்டில் பல்வேறு வண்ண மலர்ச் செடிகளும் மரங்களும் வளர்வதுபோல் சோவியத் நாட்டில் ஒவ்வொரு இன மக்களின் மொழியையும் பண்பாட்டையும் நாகரிகத்தையும் தனிச்சிறப்புடன் வளர்த்து வந்தார். மொழியின் சிறப்பு, மொழியின் வளர்ச்சி, மொழிக்கும் சிந்தனைக்கும் உள்ள தொடர்பு, போராட்டத்திற்கும் மொழிக்கும் உள்ள உறவு ஆகியவை பற்றி பல நூல்களில் லெனின் தெளிவுபடுத்தியுள்ளார். உலகில் புதிது புதிதாக மலரும் நல்ல கருத்துக்களைக் கண்டறிய மொழி அறிவு வேண்டும் என்றும் பல மொழிகளைக் கற்பதன் மூலமே நல்ல சிந்தனை ஆற்றலைப் பெறஇயலும் என்றும் கூறினார். கூறியதோடு நிற்காமல் கிரேக்கம், ஜெர்மன் , பிரெஞ்சு , உக்ரேனியன், போலீஷ், பல்கேரியன் , ஆங்கிலம் என அவர் கற்றமொழிகள் ஏராளம்.
உருசிய மொழியிலேயே அறிவியல் மற்றும் பொதுவுடைமைக் கோட்பாடுகளையும் அரசியல் பொருளாதாரக் கோட்பாடுகளையும் மனித வாழ்க்கை பற்றிய சிக்கல்களையும் அவர் தெளிவாக எடுத்துக் கூறினார். அவர் பள்ளி மாணவராக இருந்தபோதே பாடங்களில் அக்கறை செலுத்துவதைவிட மொழியைப்பற்றி அதிக அக்கறை கொண்டிருந்தார் என்று அவரின் தங்கை அன்னா கூறியுள்ளார் . ஒவ்வொரு தேசிய இனத்தைச் சேர்ந்தவர்களும் தங்கள் பண்பாட்டையும் தாய்மொழியையும் தாங்கள் விரும்பும் வண்ணம் வளர்த்துக்கொள்ளத் தடையேதும் இருக்கக் கூடாது என்றார் . ஒரு குறிப்பிட்ட மொழியை தேசிய மொழி என வலுக்கட்டாயமாகத் திணிப்பதை அவர் கண்டித்தார் . உருசிய மொழியில் பிறமொழி சொற்கள் சேர்க்கப்படுவதில் விழிப்புடன் இருந்தார். தேவையான சொல் இருக்கும் போது வேண்டுமென்றே பிறமொழிச் சொற்களை உருசிய மொழியில்கையாளுவதைக் கடுமையாக எதிர்த்தார் . வளமான உருசிய மொழி அறிவும் கருத்தாழமும் பேச்சாற்றலும் அவருக்கு இருந்த காரணத்தால் மக்களைத் தட்டி எழுப்பி புரட்சிக்குத் தயார் செய்தார் லெனின். உருசிய மொழி சொற்களஞ்சியம் வெளிவரக் காரணமாக இருந்தார். எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் . ஆனால் அந்த மொழியின் மூலம் பெற்ற அறிவை , தாய்மொழி வளம்பெற பயன்படுத்த வேண்டும் என்பதும் தாய்மொழிதான் பயிற்று மொழி என்பதும் லெனினின் தெளிவான உறுதியான முடிவாக இருந்தது . அத்தகைய உறுதியும் தெளிவும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நம் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும். அதுவே தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ வகைசெய்யும்.