tamilnadu

img

வெள்ளையர் ஆட்சியை அகற்றி ஜிம்பாப்வே ஜனாதிபதியான முன்னாள் கொரில்லா போராளி ராபர்ட் முகாபே மரணம்

ஹராரே:
ஜிம்பாப்வே விடுதலைக்குப் பின் அந்நாட்டில் ஆட்சிக்கு வந்த முதல் தலைவரான ராபர்ட் முகாபே தனது 95வது வயதில் மரணமடைந்தார்.நீண்டகாலம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் செப்டம்பர் 6 வெள்ளியன்று மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.1924ஆம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று ரோடேசியாவில் (ஜிம்பாப்வேயின் முன்னாள் பெயர்) அவர் பிறந்தார். ஜிம்பாப்வே 1980ல் சுதந்திரம் பெற்றதில் இருந்து 2017 வரை 37 ஆண்டு காலம் முகாபே ஜனாதிபதியாக இருந்தார்.

ஜிம்பாப்வே விடுதலையின் நாயகனாக அந்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்ட முகாபே தனது ஆட்சியின் இறுதி காலத்தில் ஊழல் மிக்க சர்வாதிகாரியாகப் பார்க்கப்பட்டார்.மிஷன் பள்ளி ஒன்றில் கல்வி பயின்ற ராபர்ட் கபிரியேல் முகாபே, நெல்சன் மண்டேலா கல்வி கற்ற ஃபோர்ட் ஹாரே பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டம் பெற்று ஆசிரியராக பயிற்சி பெற்றார். 1958ஆம் ஆண்டு பணிபுரிவதற்காக அவர் கானா சென்றார்.அங்கு சால்லி ஹாஃபிரோனை சந்தித்த முகாபே, 1961 ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். கறுப்பு தேசியவாதிகளின் விருப்பத் தேர்வாக அவர் மாறும் முன்பு வரை, முகாபேயை விட சால்லி ஹாஃபிரோன் அதிக அரசியல் ஈடுபாடு உடையவராக இருந்தார்.1974ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், ஜோசுவா நகோமோடு இணைந்து, மக்கள்தொகையில் சிறுபான்மையினராக இருந்த வெள்ளையரின் ஆட்சிக்கு எதிராக கொரில்லா போர் தொடுக்கும் தலைவர்களில் ஒருவராக முகாபே பிரபலமானார்.பிரிட்டிஷாரால் நடத்தப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில், ஆயுதங்களை கைவிட அவர்கள்ஒப்புக்கொண்டனர். நாட்டுப்பற்று முன்னணி கட்சியை உருவாக்கிய அவர்கள் 1980 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்தல்களில் அமோக வெற்றி பெற்று மேற்குலக பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.10 ஆண்டுகள் நாடு கடந்து வாழ்ந்த பின்னர்,தேர்தலுக்கு 6 வாரங்களுக்கு முன்னர்தான் ராபாட் முகாபே ஜிம்பாப்வே வந்தடைந்திருந்தார். ஒருங்கிணைந்த அரசை உருவாக்கிய அவர், நாட்டின் பிரதமராக மாறினார்.அவர் பிரதமர் பதவி வகித்த தொடக்க ஆண்டுகளில், உலக நாடுகளின் தலைவர்கள் அவரைச் சந்தித்தனர். 1986ல் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட கியூபா ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோவும் அதில் ஒருவர்.பிரிட்டன் பிரதமர் மார்க்ரெட் தாட்சருடனும் முகாபே நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார். தொடக்கத்தில் தன்னுடைய வெள்ளையின எதிரிகளின் பொருளாதார செல்வத்தை அவர்களே வைத்திருக்க அனுமதிக்கும் ஒப்புரவு கொள்கையை கொண்டிருந்தார்.

1997ஆம் ஆண்டு, ஜிம்பாப்வேயில், காலனியாதிக்க பிரிட்டிஷாரின் பிடியில் இருந்த நிலங்களை ஜிம்பாப்வே மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் நில சீர்திருத்தத்துக்கு நிதி ஆதரவு அளிக்கும் பேச்சுவார்த்தையில் இருந்து டோனி பிளேர் தலைமையிலான பிரிட்டன் அரசு விலகிக் கொண்டது; மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் புதிய அரசியல் சாசனம் தொடர்பாக மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் முகாபே தோல்வியடைந்த பின்னர், வெள்ளையர்கள் வைத்திருந்த பண்ணைகளை முகாபே ஆதரவுப் ஆயுதப்படையினர் கைப்பற்றத் தொடங்கினர்.வெள்ளையின விவசாயப் பண்ணைகளுக்கு எதிரான இந்த அதிரடி, முகாபேயை ஜிம்பாப்வே மக்களின் கதாநாயகன் போல மாற்றியது.இருப்பினும், நீண்டகால ஆட்சி, குடும்ப ராஜ்ஜியம், ஊழல்களால் அவருடைய புகழ், குறிப்பாக நகர்ப்புறங்களில் சீராக குறைந்தது. 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் சுற்று ஜனாதிபதி தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். வன்முறை நடைபெறுவதை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சியான எம்டிசி கட்சி பின்வாங்கியதற்கு பின்னர் நடைபெற்ற இரண்டாவது சுற்று தேர்தலில் அவர் வெற்றியடைந்தார்.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்ட தடைகளால், முதலீட்டுக்காக சீனா எதிர்நோக்கும் “கிழக்கத்திய பார்வை” கொள்கை முகாபேயை வழிநடத்தியது.நான்கு ஆண்டுகளாக நடத்திய ஓர் அதிகார பகிர்வு அரசாங்கத்திற்கு பிறகு, கறுப்பின ஜிம்பாப்வே மக்களுக்கு பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் உரிமையை வழங்குவது என்ற உள்நாட்டு கொள்கையை மையமாக வைத்து 2013ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவரது ஆளும் கட்சியான ஸானு-பிஎஃப் கட்சி வெற்றிபெற்றது.நீண்ட காலம் பதவியில் இருந்ததாக பலரால் விமர்சிக்கப்பட்ட முகாபே. தனக்கு பிறகு யார் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதில்தடம் புரண்டார். 

முகாபேக்கு உறுதுணையாக பாதுகாப்பு படைப்பிரிவுகள் இருந்தன. அவருடைய மனைவி கிரேஸ் முகாபே நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற நினைத்ததை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில் 2017 நவம்பர் 15ஆம் தேதி ஜிம்பாப்வே ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.மக்கள் பெருங்கூட்டமாக ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட பின்னர், பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றம் நடைமுறைகளைத் துவங்கிய நிலையில் 93 வயதாகி இருந்த முகாபே பணிந்தார். 37 ஆண்டுகள் பதவியில் இருந்த பிறகு அவர் தாமாக பதவி விலகினார்.