tamilnadu

img

சீனாவை தொடர்ந்து உலக நாடுகளில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்!

சீனாவை தொடர்ந்து ஈரான், இத்தாலி, தென் கொரியா உள்ளிட்ட உலக நாடுகளிலும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்றது.

சீனாவின் உகான் நகரத்தில் இருந்து கொரோனா வைரஸ், உலக நாடுகளுக்கு பரவ தொடங்கியது. இந்த நோய் தொற்று காரணமாக இதுவரை சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 2,663 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதை சீன சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது. சீனாவை தொடர்ந்து 32 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவிய நிலையில், இதனால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. இதில், சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரானில் 14 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியாக உள்ளனர். 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், ஈரானில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து, தென் கொரியாவில் 8 பேர், நோய் தொற்றின் காரணமாக பலியாகி உள்ளனர். மேலும், 893 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்கொரியாவில் டேகு நகரத்தில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் கூடுதலாக சுமார் 30,000 பேருக்கு வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தென் கொரியாவில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ஐரோப்பாவில் அதிகபட்சமாக இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 7 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜப்பானில் டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்து வெளியேறிய 4வது நபர் பலியாகி உள்ளதாகவும், 700 பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.