துருக்கி நிலநடுக்கம்: 65 மணி நேரம் கழித்து 3 வயது குழந்தை மீட்பு
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 65 மணி நேரம் கழித்து 3 வயது குழந்தை மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பலி எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது.
துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஈஜியன் கடல் பகுதியில் கடந்த வெள்ளி கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கடற்கரையோரமாக இருக்கும் இஸ்மிர் நகரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. பயங்கர நிலநடுக்கத்தால் 40க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து முற்றிலும் சேதமடைந்தன. இது தவிர ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. துருக்கியில் நிலநடுக்கத்திற்கு பின் 196 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இவற்றில் 4க்கு கூடுதலாக ரிக்டர் அளவு கொண்ட நில அதிர்வுகள் 23 முறை ஏற்பட்டு உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது என பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
துருக்கி தவிர அருகேயுள்ள சமோஸ் உள்ளிட்ட கிரேக்க தீவு பகுதிகளிலும் நிலநடுக்கம் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. இதில் 2 பேர் பலியானார்கள். 20 பேர் காயமடைந்து உள்ளனர். இந்நிலநடுக்கம் 6.9 ஆக ரிக்டரில் பதிவானது என கிரேக்க நிலநடுக்க ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் 58 மணி நேரத்திற்குள் பின் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 14 வயது பெண் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. அதேபோல் 65 மணி நேரம் கழித்து 3 வயது குழந்தை மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.