tamilnadu

img

விமானத்தில் வந்த பயணி நெஞ்சுவலியால் மரணம்

சென்னை, ஜன. 31- விமானத்தில் வந்த போது நெஞ்சுவலியால் பயணி ஒருவர் மரணம் அடைந்தார். குவைத்திலிருந்து சென்னை வரும் குவைத் ஏர்லைன்ஸ் விமானம் வழக்கமாக சென்னையில் அதிகாலை 1.30 மணிக்கு தரை இறங்க வேண்டும். 287 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்த அந்த விமானம் நள்ளிரவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது அதில் பயணம் செய்த திருப்பதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசலு பாலாஜி (46) என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அவர் இது குறித்து விமான பணிப் பெண்களிடம் கூறியுள்ளார். அவர்கள் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேலும் விமான பைலட்டுக்கு தகவல் கூறினர். அவர் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து வழக்கமான நேரத்துக்கு முன்பாக சென்னைக்கு இயக்கி வர உத்தரவிடப்பட்டது. அதன்படி அதிகாலை 12.30 மணிக்கு விமானம் சென்னை வந்தடைந்தது. அப்போது மருத்துவக் குழுவினர் தயாராக இருந்தனர். அவர்கள் விமானத்திற்குள் ஏறி ஸ்ரீனிவாசலு பாலாஜியை சோதனை செய்தனர். அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

இது குறித்து விமான நிலைய காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். விமானத்தில் பயணி யாராவது இறந்தால் விமானத்தை முழுமையாக சுத்தம் செய்து விட்டுதான் இயக்கப்படும். அதன்படி விமானம் முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டது. இதனால் 2.50 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் 2 மணி நேரத்திற்கு மேல் தாமதமாக அதிகாலை 5 மணிக்கு குவைத்துக்கு புறப்பட்டுச் சென்றது.

;