tamilnadu

img

நெல் மூட்டைக்கு கமிஷன் கேட்கும் அதிகாரிகள்

விவசாயிகள் சங்கம் புகார்

கடலூர், ஏப்.21- நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் மூட்டைக்கு ரூ.30 முதல் ரூ. 60 வரை பணம் கமிஷன் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் கடலூர் மாவட்டம் விருதாச்சலம், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. இந்த கொள்முதல் நிலையங்கள், இடைத்தரகர்களிடம் இருந்து விவசாயிகளை காப்பாற்றி, நியாயமான விலையில் விளைபொருட்களை கொள்முதல் செய்து வருகின்றன.

இந்த கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளைக்கு கமிஷன் கேட்டு பணம் பறிக்கும் செயல் தொடர்ந்து நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தின் கடலூர் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன் மாவட்ட நிர்வாகத்திற்கு அளித்துள்ள புகார் கடிதத்தின் சுருக்கம் வருமாறு:

விவசாயிகளிடம் கமிஷன் கேட்டு தொல்லை கொடுக்கும் சம்பவங்களுக்கு ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், கிராம முக்கியஸ்தர்கள் உள்ளிட் டோர் இதற்கு துணை போகும் நிலை உள்ளது. சமீபத்தில் விருத்தாசலம் மாத்தூரில் பணம் வாங்கிய கொள்முதல் உதவியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திட்டக்குடி அருகே அருகேரி கிராமத்தில் கொள்முதல் உதவியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அரசின் இந்த நடவடிக்கையை தமிழ் நாடு விவசாய சங்கம் வரவேற்கிறது.

பல இடங்களில் மூட்டை ஒன்றுக்கு ரூபாய் 30 முதல் 60 வரை கமிஷன் வாங்கக் கூடிய நிலை உள்ளது. மேலும் கொள்முதல் உதவியாளர் பிசி பொறுப்பில் உள்ளவர்கள் கடலூர் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 17 பேர் பதவி உயர்வு  கிடைத்தும் செல்லாமல் இதே பணியில் தொடரும் நிலை உள்ளது. எனவே, அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் பணம் வாங்குவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.