நாமக்கல், மே 19-நாமக்கல் வாரச்சந்தையில் மாம்பழம் வழக்கத்தை காட்டிலும் வரத்து அதிகமாக இருந்ததால் அவற்றின் விலை சரிவடைந்தது. நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு காய்கறிகள், பழங்கள் மட்டுமின்றி,வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தசந்தையில் வழக்கத்தை காட்டிலும் அதிகமாக மாம்பழங்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டு இருந்தன. வரத்து அதிகமாக இருந்ததால், அதன் விலை சரிவடைந்தது. எனவே சந்தைக்கு வந்த பொதுமக்கள் மாம்பழங்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். நாமக்கல் வாரச்சந்தையில் இமாம் பசந்த் ரக மாம்பழம் கிலோ ரூ.50க்கு விற்பனை செய்யப்பட்டது. பங்கனபள்ளி கிலோ ரூ.20க்கும், கிளிமூக்கு கிலோ ரூ.7க்கும், சேலம் குண்டு ரகம் கிலோ ரூ.15க்கும், நீலம் கிலோ ரூ.10க்கும், மல்கோவா கிலோ ரூ.20க்கும் விற்பனை செய்யப்பட்டது.