tamilnadu

img

நாமக்கல் மாவட்டத்தில் அதிகரிக்கும் தீண்டாமைக் கொடுமைகள்

நாமக்கல், மே.30- நாமக்கல் மாவட்டத்தில் தலித், அருந்ததியர் சமூக மக்கள்மீது தொடர்ந்து சாதி வன்மத்துடன் நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க மறுத்து வருவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஒன்றியம் கொலங்கொண்டை ஈச்சங்காட்டில் அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது அப்பகுதியைச் சேர்ந்த சாதிய ஆதிக்க சக்தியினர் கொடூரதாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி ரம்யா என்பவர்திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக மல்லசமுத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையினர் அலட்சியம் காட்டி வருகின்றனர்.இதேபோல், இராசிபுரம் வட்டம், மெட்டாலா கிராமத்தில் அருந்ததியர் இளைஞர்களை சாதி வன்மத்துடன் தாக்கிய சமூக விரோதிகளை தற்போது வரை கைது செய்யாமல் காவல்துறை மெத்தனம் காட்டி வருகிறது. மேலும்,  நாமகிரிபேட்டை போதகாபட்டி   மற்றும் பரமத்தி வட்டம் செருக்கலை புதுப்பாளையம் கிராமத்தில் அருந்ததியர் மக்கள் மீது சாதி வன்மத்துடன் தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை  எடுக்காமல் கட்ட பஞ்சாயத்து செய்து வருகிறது.காவல்துறையினரின் இத்தகைய அலட்சிய மற்றும் அத்துமீறல் நடவடிக்கைகளை கண்டித்தும், சம்மந்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்ட சமூக விரோதிகளை உடனடியாகக் கைது செய்திட வேண்டும். பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு உரியநிவாரணமும், பாதுகாப்பும்வழங்கவேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் சார்பில் வியாழனன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர்அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.அசோகன், ந.வேலுசாமி, கே.தங்கமணி, எஸ்.சுரேஷ் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலதுணைத் தலைவர் பி.பழனிசாமி, மாவட்ட செயலாளர் பி.ராமசாமி, அகில இந்திய விவசாயதொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சி. துரைசாமி.  பி. செல்வராஜ், கட்டுமான தொழிளாலர் சங்க மாவட்ட செயலாளர் கு.சிவராஜ் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில், கோரிக்கைகள் அடங்கியமனு மாவட்ட ஆட்சியர் மற்றும்மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வழங்கப்பட்டன.