tamilnadu

img

நாகை: சப்பரத்தில் சிக்கி ஒருவர் பலி

நாகை மாவட்டம் திருச்செங்காட்டங்குடி உத்திராபதீஸ்வர சுவாமி திருக்கோயில் சப்பர வீதியுலாவில், சப்பரத்தின் சக்கரத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டாங்குடியில் உள்ள உத்திராபதிஸ்வரர் கோயிலின் சித்திரைப் பெருவிழா நிகழ்வாக வெள்ளிக்கிழமை இரவு சப்பரம் வீதியுலா நடைபெற்றது.
இந்தச் சப்பரம் தெற்கு வீதியில் திரும்பும்போது, சப்பரத்தின் சக்கரத்துக்கு முட்டுக்கட்டைப் போட்டுக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த தீபராஜன் என்பவர் மீது, சப்பரத்தின் சக்கரம் ஏறியது. இதில் பலத்த காயமடைந்த தீபராஜன், சிகிச்சைக்காக நாகைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த  நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  விசாரணை மேற்கொண்டார். உயிரிழந்த தீபராஜன் குடும்பத்தினர் பல காலமாக தேருக்கு முட்டுக்கட்டைப் போடும் பணியில்  ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
உயிரிழந்த தீபராஜன் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்க மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாகை மாவட்டத்தில் தற்போது சப்பர சக்கரத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.