tamilnadu

img

கஞ்சி காய்ச்சுவதற்குக் கூட அரிசி இல்லை.... வெள்ளாடிச்சிவிளையிலிருந்து ஒரு வாட்சப் குரல்

நாகர்கோவில்
நாகர்கோவில் அருகே வெள்ளாடிச்சிவிளை பகுதி கொரோனா பாதிப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக சென்று வழங்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால், இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சுமார் 25 நாட்களுக்கு மேலாக வீடுகளுக்குள்ளேயே முடக்கி வைக்கப்பட்டுள்ளதால் போதுமான உணவு கிடைக்காமல் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வாட்ஸ் அப்பில் உணவு கேட்டு வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.  அதில்,   நாங்கள் எத்தனை நாள் வேண்டுமானாலும் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்க தயாராக இருக்கிறோம். ஆனால், எங்களுக்கு தேவையான உணவு பொருட்களை வழங்க வேண்டும்.

கடந்த மாதம் வாங்க வேண்டிய ரேசன் அரிசி கூட இன்னும் வாங்கவில்லை. மளிகை பொருள் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை வெறும் அரிசியை வைத்து கஞ்சி காய்ச்சி குடித்து விடலாம். ஆனால் கஞ்சி காய்ச்சுவதற்கு கூட அரிசி இல்லை. இதனால் சிறு குழந்தைகளை வைத்து நாங்கள் மிகவும் அவதிப்படுகிறோம். எனவே மாநகராட்சி அதிகாரிகள் தயவுகூர்ந்து அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அவர் கண்ணீர் மல்க வாட்ஸப்பில் பேசி வெளியிட்டுள்ளார்.
 

;