நாகர்கோவில்:
குடியிருப்பு பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் கனரக வாகனங்களை கட்டுப்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்டகாவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: மாநகராட்சிப்பகுதிக்குள் கனரக டாரஸ் லாரிகள் வரக்கூடாது என்பதையும் மீறி ஏராளமான கனரக லாரிகள் பகலிலும் இரவிலும் மணல், எம் சேன்ட், பாறாங்கற்களை ஏற்றி வரிசை வரிசையாக சென்று கொண்டிருக்கின்றன. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும் நகர் பகுதிக்குள் பாதாள சாக்கடை, குடிநீர்திட்டம், தனியார் தொலை தொடர்புக்காக தோண்ட்டப்பட்ட குழிகள் காரணமாக இரவுநேரம் வருகிற லாரிகள் புதைந்துவிடுவதால் அவை கோட்டார் பீச்ரோடு, கேம்ப்ரோடு, கார்மல் பள்ளி வழியாக மேற்குப்பகுதிகளுக்கு செல்கின்றன. இரவுநேரங்களில் காலி வண்டிகள் திரும்பி செல்கிற போது அதிவேகமாகவும் பயங்கர சப்தமாகவும் செல்வதால் குடியிருப்பு பகுதி மக்கள் தூக்கமின்றி அவதிப்படுகின்றனர்.இது குறித்து மாநகர அதிகாரிகள் மற்றும்காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காத காரணமாக காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து அதன்மூலம் போக்குவரத்தை சீர்படுத்த வேண்டும். நடவடிக்கை எடுக்கவில்லையெனில் மக்களை திரட்டி கட்சியின்சார்பாக வாகனங்களை தடுத்து நிறுத்தும் போராட்டம் நடைபெறும் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். அகமது உசைன்,மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.அந்தோணி, மாநகர செயலாளர் கே.மோகன் உள்ளிட்டோர் அளித்தனர்.