இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் ஒருவர் பலி
நாகர்கோவில், செப்.2-குமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே வேதநகர் அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் ஜோசப் என்பவரது மகன் ஜோக்கின் விமல் (27). அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் ராஜன் (27) என்பவருடன் ஞாயிறன்று மாலை, இரு சக்கர வாகனத்தில் நாகர்கோவில் நோக்கி சென்றார். ஜோக்கின் விமல், இருசக்கர வாகனத்தை ஓட்ட ராஜன் பின்னால் அமர்ந்திருந்தார். அவர்கள் என்ஜிஓ காலனி, முகிலன்விளை அருகே வந்த போது, எதிரே வந்த மேலகிருஷ்ணன்புதூரை சேர்ந்த சேவியர் (47) என்பவரின் இருசக்கர வாகனத்தில் நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜோக்கின் விமல், ராஜன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஜோக்கின் விமல் பரிதாபமாக இறந்தார். அவரது நண்பரான ராஜன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து சுசீந்திரம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
குளிக்க சென்றவர் குளத்தில் மூழ்கி பலி
நாகர்கோவில், செப்.2-குமரி மாவட்டம், மார்த்தாண்டம் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (35). கூலி தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் ஞாயிறன்று மாலை அப்பகுதியில் உள்ள பாறைகுளத்தில் குளிக்க சென்றார். அப்போது திடீரென மாயமானார். பால்ராஜை காணாததால் அவரை தேடிய அவரது உறவினர்கள் குளத்தில் இறங்கி பார்த்தனர். அப்போது நீரில் மூழ்கிய நிலையில் கிடந்த பால்ராஜை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கெனவே அவர் மூச்சு திணறி இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கருங்கல் காவல் துறையினர், பால்ராஜ் உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் பொதுமக்கள் அவதி
திருநெல்வேலி, செப். 2-நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிவசைலத்தில்தேங்கியுள்ள கழிவு நீர் உடனடியாக அதை அகற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் மேலாம்பூர் ஊராட்சிக்கு வலியுறுத்தியுள்ளதாவது- மேலாம்பூர் பஞ்சாயத்து, கருத்தப்பிள்ளையூர், சிவசைலம் மெயின் ரோட்டில், காமராஜர் மேட்டுத்தெருவில் இருந்து வரும் கழிவுநீர் மற்றும் மழை நீர், சிவசைலம் மெயின் ரோட்டை தாண்டி, வடக்கு நோக்கி செல்ல, மெயின் ரோட்டில் பாலம் இல்லாததால், சிவசைலம் ரோட்டிலேயே தேங்கி கிடக்கிறது, இதனால் தார்சாலை பழுதடைந்துள்ளது, மேலும் சுகாதாரக் கேடு ஏற்படுவதால் பல நோய்கள் பரவும் நிலை உள்ளது.எனவே, சிவசைலம் மெயின் ரோட்டில், நான்கு முக்கு சந்தியில், சிறு பாலம் அமைத்து, கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு மேலம்பூர் பஞ்சாயத்து நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறேன்.
சைக்கிள்கடை தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு
திருநெல்வேலி, செப். 2- நெல்லை மேலப்பாளையத்தில் சைக்கிள் கடை தொழிலாளி மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். மதுரையை சேர்ந்தவர் சுப்பையா மகன் சண்முகம் (50). இவர் மேலப்பாளையம் கருங்குளத்தில் தங்கியிருந்து ரெட்டியார்பட்டி சாலையில் உள்ள ஒரு சைக்கிள் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில்சைக்கிள் கடையில் இருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசாரின் விசாரணையில் அவருக்கு ஏற்கனவே வயிற்றுவலி இருந்ததாக கூறப்படுகிறது.
தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை : 2 பெண்கள் உட்பட 4பேர் கைது
தூத்துக்குடி, செப். 2 தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்றதாக 2 பெண்கள் உட்பட 4பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் தங்ககிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சிலுவைப்பட்டி அருகே ஞாயிறு மாலை ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகத்தின் பேரில் அங்கு நின்று கொண்டிருந்த 2 பெண்கள் உட்பட 4பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண்கள் மதுரையைச் சேர்ந்த கஞ்சா வியாபாரிகளான பெத்தானியாபுரம் மேட்டுதெருவை சேர்ந்த சிவசாமி மனைவி கருப்பாயி (49), மதுரை நரிமேட்டைச் சேர்ந்த முனி மனைவி பஞ்சவர்னம் (60) என்பது தெரியவந்தது. மேலும், அவர்களிடம் இருந்து கஞ்சாயை வாங்கி தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த முருகன் மகன் முத்துராஜ் என்ற வைசாலி (20), அதே பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் மகன் மாரிசெல்வம் (20), ஆகிய இருவரும் தூத்துக்குடியில் விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து 2 பெண்கள் உட்பட 4பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 3 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.