tamilnadu

img

மீனவர்கள் கணக்கெடுப்பை நேரடியாக நடத்துக... மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்

நாகர்கோவில்:
மீனவர் கணக்கெடுப்பில் தவறுகளை சரிசெய்ய மீனவ பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து மீனவர்கள் வாழும் கிராமங்கள், கூட்டுறவு சங்கங்கள், வாரியங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வாழும் மீனவர்களின் கணக்கெடுப்பை நேரடியாக நடத்த அரசு முன்வர வேண்டும் என தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு) மாநிலக் குழு கூட்டம் புதனன்று நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாநில தலைவர் ஜி.செலஸ்டின் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் எஸ். அந்தோணி, சிஐடியு மாநில துணை பொதுச்செயலாளர் வி.குமார், சிஐடியுகுமரி மாவட்ட செயலாளர் கே.தங்கமோகன், மீனவர் சங்க மாநில நிர்வாகிகள், மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில், கடல் மற்றும் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தையே தகர்க்கும் மீன்வள மசோதா 2020 ஐ வாபஸ் பெற மத்திய அரசை வலியுறுத்தியும், வருமான வரி கட்டும் அளவுக்கு வருவாய் இல்லாத அனைத்து குடும்பங் களுக்கும் ரூபாய் 7 ஆயிரத்து 500 வீதம் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் நவம்பர் 26 அன்று நடைபெறும் பொதுவேலை நிறுத்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் மீனவர்கள் மீன் தொழிலாளர்கள் அனைவரும் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது.தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் முகத்துவாரத்தில் உள்ள மணல் மேடுகளால் ஏற்படும் மீனவர் உயிர் பலியையும், பொருள் சேதங்களையும் தடுக்க நிரந்தரமாக மணல் அகற்றும் இயந்திரம் மற்றும் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அரசு போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும், உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட்டு வந்த மீன்பாசி குத்தகை உரிமத்தை தொடர்ந்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.