நாகப்பட்டினம், செப்.1- நாகப்பட்டினம் மாவட்டம் காவிரியின் கடைமடைப் பகுதியாகும். மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டாலும் இப்பகுதிகளுக்குத் தண்ணீர் வருவதென்பது அரிது தான். காரணம், ஆண்டுக்கணக்கில் ஆறுகள், வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் கிடக்கின்றன. நீர்த் திறப்பு மதகுகள் சீரற்றுக் கிடக்கின்றன. முப்போகம் விளைந்த பூமியில் தற்போது குறுவைச் சாகுபடி என்பது அரிதாகி விட்டது. சம்பாப் பயிரையும் காப்பாற்றிட வழியில்லாமல் விவசாயிகள் தவிக்கிறார்கள். எனவே, கடைமடைப் பகுதிகளுக்குத் தண்ணீர் வர வேண்டுமானால் மேட்டூர் அணையில் அதிக நீர் திறந்து விடப்பட வேண்டும். 20,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டால் தான் இப்பகுதிகளுக்குச் சிறிதளவாவது தண்ணீர் வரும். இந்தக் கோரிக்கையை முன்வைத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நாகை மாவட்ட ஒன்றியப் பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கீழையூர் ஒன்றியம் மேலப்பிடாகைக் கடைத்தெருவில், விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் கி..கிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். சி.பி.எம்.கீழையூர் ஒன்றியச் செயலாளர் எம்.முருகையன், வி.ச.மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.பால்சாமி, ஏ.ராமலிங்கம், சி.பி.எம்.ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஏ.முருகையன், என்.பன்னீர்செல்வம், பி.ராமலிங்கம், எம்.ரவி, தன்ராஜ், இ.ராஜேந்திரன் உள்ளிட்டோர் உரையாற்றினர். தலைஞாயிறு ஒன்றியம் குளப்பாடு கடைத்தெருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எம்.என்.அம்பிகாபதி தலைமை வகித்தார். சி.பி.எம். ஒன்றியச் செயலாளர் ஏ.வேணு, விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் டி.செல்லையன் உரையாற்றினர்.