tamilnadu

img

44 ஆண்டு ஊராட்சித் தலைவராக பணியாற்றிய மூத்த தோழர் தாதன்திருவாசல் கே.வடிவேல் காலமானார்...

நாகப்பட்டினம்:
ஒன்றுபட்ட கீழத்தஞ்சை மாவட்டத்தில் உழைப்பாளி மக்களின் உன்னதத் தலைவராகப்  போற்றப்பட்ட  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழரும், கீழையூர் ஒன்றியம், காரப்பிடாகை தெற்கு முன்னாள் ஊராட்சி மன்றத்  தலைவருமாகிய தாதன்திருவாசல் தோழர் கே.வடிவேல் சனிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் உடல் நலக்குறைவால் காலமானார். இவருக்கு வயது 92.

நாகப்பட்டினம் மாவட்டம்  நிர்வாக ரீதியாகப் பிரிப்பதற்கு முன்னதாகவே ஒருங்கிணைந்த கீழத்தஞ்சை மாவட்டத்தில் பொதுவுடைமை இயக்க வரலாற்றில் களப்பணியின் மூலம் மகத்தான பங்களிப்போடு மக்களோடு மக்களாகத் திகழ்ந்தவர்.
கீழையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட  காரப்பிடாகை தெற்கு ஊராட்சியில் 1957 முதல் 2001 வரை தொடர்ந்து  44 ஆண்டுகள் ஊராட்சி மன்றத் தலைவராக அரும்பணியாற்றியதால், இவரை மக்கள் ‘சவுத்’ என்றும்,‘கே.வி’ என்றும் அன்போடு அழைத்தார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் விவசாயிகள் சங்கத்திலும் இணைந்து ஏழை எளிய மக்களுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் அயராது பாடுபட்டவர்.1962-ல் நில உச்சவரம்புச்  சட்டத்தைத்  திருத்தக் கோரிய மாநிலம் தழுவிய போராட்டத்தில் கலந்துகொண்டு கடலூர் சிறையில் மூன்று மாதம்  அடைக்கப்பட்டிருக்கிறார்.

1962-ல் வேட்டைக்காரனிருப்புத்  தேனீர்க் கடைகளில் பின்பற்றப்பட்ட இரட்டைக்  குவளை முறையை எதிர்த்துப் போராடி  அதனை ஒழிப்பதற்குக்  காரணமாக இருந்தவர். 1962-ல் வசதிபடைத்த சில நில  ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலத்தை 80க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அளித்து, வீட்டுமனை பட்டா பெற்று வழங்கியவர்.1963-ல் வானவன்மகாதேவி கிராமத்தில் புறம்போக்கு நிலத்தில் வாழ்ந்த தலித் மக்களின்   நிலத்தை ஆக்கிரமிப்புச் செய்தவர்களிடமிருந்து நிலத்தை மீட்டு அந்த மக்களுக்கே அந்த நிலங்களை அளித்தவர். 1972 ல்,  கோவில்பத்து மாரியம்மன் கோவில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தி, போராட்ட வெற்றியின் காரணமாகத் தாழ்த்தப்பட்ட மக்கள் அக்கோவிலில் சென்று வழிபடுவதற்குக் காரணமாகியிருந்தவர். 1975-ல், அவசரகாலச்  சூழ்நிலையில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து, பின் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றிருக்கிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்  ஜி.ராமகிருஷ்ணன் எழுதிய “களப்பணியில் கம்யூனிஸ்டுகள்” என்னும் நூலில் இவரைப் பற்றி மிகப் பாராட்டி எழுதியுள்ளார்.அவரது இறுதி அஞ்சலி நிகழ்வு 19.10.2020 காலை  தாதன்திருவாசல் அவரது இல்லத்தில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளருமாகிய பெ.சண்முகம், கட்சியின் மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி, மாநிலக்குழு உருப்பினரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான வி.மாரிமுத்து மற்றும் ஏராளமான தோழர்கள், பொதுமக்கள் இறுதியஞ்சலி செலுத்தினர்.