தரங்கம்பாடி: தமிழ்நாடு அறிவியல் கழகம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் துளிர் மற்றும் ஜந்தர் மந்தர் என்கிற அறிவியல் வினாடி- வினாவை மாநில அளவில் நடத்தி வருகிறது. பள்ளிகளுக்கிடையே வட்ட அளவில் துவங்கி மாவட்ட, மண்டல, மாநில அளவில் நடத்தி வரும் நிலையில் மண்டல அளவிலான வினாடி -வினா சனிக்கிழமை திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. திருச்சி மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலிருந்தும் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நாகப்பட்டினம் மாவட்டம் பொறையாரிலுள்ள சர்மிளா காடஸ் எஸ்.எம்.மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் அணியினர் சீனியர் பிரிவில் முதலிடம் பிடித்து மாநிலப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற 10ஆம் வகுப்பு மாணவி புகழ், 9 ஆம் வகுப்பு மாணவர்கள் செல்வகுமார், குகராஜ் ஆகியோருக்கு கேடயமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் சுகுமாரன் மற்றும் திருச்சி மாநகர கல்வி அலுவலர் ஜெயலட்சுமி ஆகியோர் பரிசுகளை வழங்கினர். பரிசு பெற்ற மாணவ மாணவிகளையும், வழிகாட்டி ஆசிரியர் லஷ்மிபிரபா ஆகியோரை பள்ளி முதல்வர் பாண்டியராஜன் மற்றும் தமிழ்நாடு அறிவியல் கழகத்தின் மாவட்டச் செயலாளர் சந்தோஷ் காட்சன் ஆகியோர் பாராட்டினர்.