tamilnadu

நெல் கொள்முதல் நிலைய சுமை தூக்கும் தொழிலாளருக்கு கூலி உயர்வு வழங்கக் கோரிக்கை

சீர்காழி, பிப்.16-  நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வேலை பார்க்கும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்த்தி வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  நாகை மாவட்டம், கொள்ளிடம் மற்றும் சீர்காழி பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்தத் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சுமந்து லாரியில் ஏற்றி விடும் சிரமமான பணியை செய்து வருகின்றனர். விவசாயிகள் விற்பனைக்கு நெல் மூட்டைகளை எடுத்து வந்தவுடன் மூட்டைகளில் உள்ள நெல்லை வெளியே எடுத்து இயந்திரத்தில் இட்டு தூற்றிய பிறகு எடை வைத்த நெல்லை மூட்டையாக தைத்து கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கின்றனர். இதற்கு ஒரு மூட்டைக்கு ஒரு ரூபாய் 68 பைசா வீதம் கூலி கிடைக்கிறது.  பின்னர் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றி விடுவதற்கும் ஒரு ரூபாய் 68 பைசா வீதம் மட்டுமே கூலியாகப் பெற்று வருகின்றனர். ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் மூட்டைகளின் எண்ணிக்கையை வைத்து கூலியை பிரித்துக் கொள்கின்றனர். ஒரு நாளைக்கு ஒவ்வொரு தொழிலாளர்களுக்கு ரூ 200 முதல் 250 வரை மட்டுமே கூலி கிடைக்கிறது என்கின்றனர். மேலும் காலை முதல் மாலை வரை நெல் மூட்டைகளை சிரமத்துடன் சுமை தூக்கும் தொழிலாளர்கள் தினந்தோறும் மிகக் குறைந்த கூலியை மட்டுமே பெற்று வருகின்றனர். கடந்த பல வருடங்களாக குறைந்த ஊதியத்தை மட்டுமே தொழிலாளர்கள் பெற்று வருகின்றனர்.  இது குறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளர் சங்க மாநிலத் துணைத் தலைவர் ராஜ்மோகன் கூறுகையில், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த கூலியே வழங்கப்படுகிறது. இந்தத் தொகையை வைத்து குடும்பம் நடத்த மிகவும் சிரமமாக இருக்கிறது. கொள்முதல் நிலையங்களுக்கு வரும் லாரிகளுக்கு கட்டாய மாமூல் கொடுக்க வேண்டியிருக்கிறது. குறைந்த கூலி பெற்ற நிலையில், அந்தத் தொகையிலிருந்து தான் மாமூல் கொடுக்க வேண்டும். பொங்க, தீபாவளி போனஸ் கடந்த இரண்டு வருடங்களாக வழங்கவில்லை. தொழிலாளர்களுக்கு நேரிடையாக கையில் வழங்க வேண்டும்.  கொள்முதல் நிலையம் திறந்து ஒரு மாதத்திற்கும் மேலாகியும் இதுவரை தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை. மேலும் கொள்முதல் நிலையங்களுக்கு ஆய்வுக்காக வரும் அதிகாரிகள் ஏதாவது குறை என்று ஊழியர்களை பழிவாங்கும் நோக்கத்தில் ஈடுபடுகின்றனர். ஏதாவது குறை என்று சொல்லி துன்புறுத்துகின்றனர். விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த நெல்லை தரமற்ற நெல் என்று சிரமப்படுத்தி வருகின்றனர். இப்படி துன்புறுத்தி வரும் அதிகாரிகளைக் கண்டித்தும் கூலியை உயர்த்தி நேரடியாக வழங்க வலியுறுத்தியும் வரும் மார்ச் 4-ந் தேதி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் உள்ள சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்தார்.