தரங்கம்பாடி, ஜூன் 6-திருக்கடையூர் அரசு மேல் நிலைப்பள்ளியை சுற்றிலும் கருவேலமரங்கள் மண்டிக் கிடப்பதால் மாணவர்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது. நாகை மாவட்டம் திருக்கடையூரில் அரசு மேல்நிலைப்பள்ளியில் அதனைசுற்றியுள்ள கிராமங்களான டி.மணல்மேடு, அபிஷேகக் கட்டளை, சீதைசிந்தாமணி, சரபோஜிராஜபுரம், திருமெய்ஞானம், பெருமாள் பேட்டைஉள்ளிட்ட பகுதிகளிலிருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமான ஏழை, எளிய மாணவர்கள் கல்வி பயிலும் சூழலில் இப்பள்ளியில் போதுமான குடிநீர், கழிப்பறை வசதிகள் முறையாக இல்லாமல் ஏற்கனவே மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் சூழலில் தற்போது இப்பள்ளியை சுற்றி கருவேல மரங்கள் அதிகமாக வளர்ந்து இடையூறாக உள்ளது.குறிப்பாக பள்ளி செல்லும் சாலைகளில் அதிகமாக உள்ளதால் மாணவர்கள் சிரமப்பட்டு பள்ளி சென்று வருகின்றனர். கோடை விடுமுறையிலேயே இதனை அழிக்காமல் பள்ளி நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளதாகவும், உடனடியாக கருவேல மரங்களை அழிக்க வேண்டுமென பொதுமக்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.