tamilnadu

ஓதவந்தான்குடி சாலையை மேம்படுத்துக! சீர்காழி மக்கள் கோரிக்கை

சீர்காழி, செப்.18- நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே ஒதவந்தான்குடி கிராமத்திலிருந்து பச்சபெருமாள்நல்லூர் செல்லும் 3 கி.மீ தார்ச் சாலை கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக மேம்படுத்தப்படவில்லை. இதனால் சாலையில் கற்கள் பெயர்ந்து கிடக்கின்றன.  கற்கள் சாலையில் சிதறிக் கிடப்பதால் இரு சக்கர வாகனங்களில் செல்லும் பள்ளி மாணவர்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். கொள்ளிடத்திலிருந்து புத்தூர், திருமயிலாடி, கூத்தியம்பேட்டை மற்றும் ஓதவந்தான்குடி ஆகிய கிராமங்கள் வழியாக பச்சைபெருமாள்நல்லூர், உமையாள்பதி, கடவாசல் வழியாக சீர்காழி சென்று வருவதற்கும் முக்கிய சாலையாக இந்த சாலை உள்ளது.  இச்சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்வோர்களும் கற்கள் இடறி விபத்துக்குள்ளாகின்றனர். விவசாயிகளும் பொதுமக்களும் இந்த சாலையின் வழியே செல்வதற்கு மிகவும் அவதியடைகின்றனர். இந்த சாலையை மேம்படுத்தக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கிராமப் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஓதவந்தான்குடி-பச்சபெருமாள்நல்லூர் சாலையை மேம்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.