சிதம்பரம், ஜூன் 6-கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பி.முட்லூரில் உள்ள ஜவகர் தனியார் மேல் நிலைப் பள்ளியில் எல்கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை கிராமப்புற மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள்.இந்த பள்ளியில் அரசு ஒதுக்கீட்டில் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டில் வரும் ஏழை மாணவர்களிடம் கல்விக் கட்டணம் ரூ.9 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு, பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.பெற்றோரின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து இந்தய ஜனநாய வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்ஆர்ஜி. லெனின், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் லெனின் ஆகியோர் தலைமையில் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியின் உள்ளே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து பள்ளியின் நிர்வாகத்திடம் இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து, நோட்டு புத்தகம், சீருடை, பராமரிப்பு, தேர்வுக் கட்டணங்கள் மட்டும் வசூலிக்க பள்ளியின் நிர்வாகம் ஒப்புக் கொண்டதால் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.