நாகப்பட்டினம், ஜூலை 12- நாகை மாவட்டம் பிரதாபராமபுரம் ஊராட்சியைச் சேர்ந்தது செருதூர் கிராமம். இது வேளாங்கண்ணியை ஒட்டி ஓடும் வெள்ளையாற்றின் தென்கரையில் அமைந்துள்ள மீனவர்கள் அதிகம் வாழும் கிராமம். இங்குள்ள உயர்நிலைப் பள்ளி கடந்த 7 ஆண்டுகளாக, மீனவ மாணவ- மாணவியரைக் கொண்டு தொடர்ந்து 100 விழுக்காடு, 10 ஆம் பொது த்தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்து வருகிறது. இப்பள்ளிக்கான கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகம், கழிப்பறைகள், சுற்றுச்சுவர் உள்ளிட்டவை 1 கோடியே, 61 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர் தலைமையில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அடிக்கல் நாட்டினார். நிகழ்வில் முதன்மைக் கல்வி அலுவலர் கே.குணசேகரன், மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் உள்ளி ட்டோர் பங்கேற்றனர்.