tamilnadu

img

புதிய தேசிய கல்விக்கொள்கை -2019 ன் பின்னணி? - நான்காம் பாகம்

ஜேஎன்யூ பல்கலைக்கழக நிர்வாகத்தின் கைப்பாவை..

மஜார் ஆசிப்

 கௌஹாத்தி பல்கலைக்கழக பாரசீகத் துறைப் பேராசிரியர்

வரைவறிக்கை குழு நியமனக் கடிதத்தில் கௌஹாத்தி பல்கலைக்கழக பாரசீகத் துறைப் பேராசிரியர் எனக் குறிப்பிடப்பட்டிருந்த மஜார் ஆசிப், வரைவறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பாரசீகம் மற்றும் மத்திய ஆசிய ஆய்வுகள் மையப் பேராசிரியராக மாறியிருந்தார். நல்லவேளையாக சமர்ப்பிக்கப்பட்ட வரைவறிக்கையில் கௌஹாத்தி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் என்று அவர் பெயர் குறிப்பிடப்படவில்லை. 2017 ஜூன் 24 அன்று தேசிய கல்விக் கொள்கைகள் குறித்த வரைவறிக்கையைத் தயாரிப்பதற்கான குழுவில் நியமனம் செய்யப்பட்டிருந்த மஜார் ஆசிபின் பெயர், மூன்று மாதங்களுக்குள்ளாக 2017 செப்டம்பர் 28 அன்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பாரசீகம் மற்றும் மத்திய ஆசிய ஆய்வுகள் மையத்தில் பேராசிரியாகப் பணியில் அமர்த்தப்படுவதற்காகப் பரிந்துரை செய்யப்படுகிறது. கௌஹாத்தி பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வந்த மஜார் ஆசிப், மீளத் திரும்பப் பணிக்குச் செல்லும் வகையில் 2017 நவம்பர் 1 அன்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பதவியேற்றுக் கொள்கிறார். பேராசிரியர் பணியில் சேர்ந்த இரு வாரங்களுக்குள்ளாக, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆட்சிக்குழுவின் உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்ததால் 2017 நவம்பர் 15 அன்று நியமனம் செய்யப்பட்ட நான்கு பேராசிரியர்களில்  ஒருவராக மஜார் ஆசிப்பும் இருக்கிறார். பல்கலைக்கழகத்தில் பணி புரியும், பணி நிரந்தர ஆணை பெற்றிராத ஆசிரியர் ஒருவரே பல்கலைக்கழகத்தோடு தொடர்பில்லாத ஆட்சிக்குழு உறுப்பினராக, பல்கலைக்கழக ஆட்சிக்குழுவில் நியமனம் பெற்றது ஆசிரியர்கள் வட்டாரத்தில் அப்போது சலசலப்பை உண்டாக்கியது. ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்கள் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர். பல்கலைக்கழக ஆட்சிக்குழு அவருடைய பேராசிரியர் பணி நியமனத்திற்கான ஒப்புதலை வழங்குவதற்கு முன்பாகவே அவர் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினராகப் பதவியேற்றுக் கொள்கிறார். 2017 நவம்பர் 23 அன்று மஜார் ஆசிப்பை உள்ளடக்கிய ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆட்சிக்குழு கூடுகிறது. பல்கலைக்கழக ஆட்சிக்குழு மஜார் ஆசிப்பின் பணி நியமனத்திற்கான ஒப்புதலை அந்தக் கூட்டத்தில் வழங்குகிறது. அந்தக் கூட்டத்தில் தான் கலந்து கொள்ளவில்லை என்பதால் தனது பணி நியமனத்திற்காக வழங்கப்பட்ட ஒப்புதல் சட்டவிரோதமானது அல்ல என்று ஆசிப் கூறிக் கொள்கிறார். இதுபோன்ற வாய்ப்புகள் எல்லோருக்கும் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்!

மஜார் ஆசிப் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலேயே பயின்று தன்னுடைய முதுகலை, மற்றும் பிஎச்.டி பட்டங்களைப் பெற்றிருக்கிறார். 2018 ஜனவரியில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்களுக்கான வருகைப் பதிவு தொடர்பான சர்ச்சையும் போராட்டங்களும் தொடங்கிய வேளையில், மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து துறைத் தலைவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு கடிதம் எழுதினர். கடிதம் எழுதிய காரணத்தை முன்னிறுத்தி, ஏழு துறைத் தலைவர்களை அவர்களுடைய தலைமைப் பதவியில் இருந்து நீக்கி பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. கலை மற்றும் அழகியல் துறையின் தலைவராக இருந்த கவிதாசிங் நீக்கப்பட்டு, கலை மற்றும் அழகியல் துறையோடு சற்றும் தொடர்பில்லாத பாரசீகம் மற்றும் மத்திய ஆசிய ஆய்வுகள் மையப் பேராசிரியராக அப்போதுதான் பணியமர்த்தப்பட்டிருந்த மஜார் ஆசிப் கலை மற்றும் அழகியல் துறையின் தலைவர் பொறுப்பில் துணைவேந்தரால் பணி நியமனம் செய்யப்படுகிறார். கலை மற்றும் அழகியல் துறையின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பணிமூப்பில் மிக இளைய, பணி வரன்முறைப்படுத்தப்படாத பாரசீகத் துறைப் பேராசிரியரான மஜார் ஆசிப், நிர்வாகத்தின் கட்டளைகளுக்கு அடிபணிந்து செயல்படும் பொம்மையாக, கலை மற்றும் அழகியல் துறை சார்ந்த எம்ஃபில், பிஎச்டி மாணவர்களுக்கான வாய்மொழித் தேர்வை நடத்த முன்வருகிறார். தங்களுடைய துறைக்கு சற்றும் தொடர்பில்லாத பேராசிரியர் ஒருவர் அவ்வாறு தேர்வுகளை நடத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள், துறையின் கதவுகளுக்குப் பூட்டு போட்டு துறைக்குள் மஜார் ஆசிப் நுழைய முடியாதவாறு பூட்டி வைத்து விடுகின்றனர்.  

வருகைப் பதிவில் கையொப்பமிடாத ஆய்வு மாணவர்களின் பெற்றோர்களுக்கு கடிதம் மூலமாகத் தகவல் அளிக்கப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் முடிவெடுக்கிறது. ஆய்வு மாணவர்கள் பெரும்பாலும் 25 வயதிற்கு மேற்பட்டவர்களாக, ஒரு சிலர் திருமணம் ஆனவர்களாக இருக்கின்ற நிலையில் பள்ளிக் குழந்தைகளைப் போல வீட்டிற்கு கடிதம் அனுப்புவோம் என்று நிர்வாகம் எடுத்த முடிவு ஜேஎன்யூ போன்ற உயர்கல்வி நிறுவனத்திற்கு ஏற்ற செயல்பாடுதானா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க மறுத்து ஆசிப் அமைதி காத்தார்.  

இது மட்டுமல்ல… 2018 மார்ச் மாதம் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கான பணி மற்றும் நடத்தை விதிகளை உருவாக்குவதற்கென பல்கலைக்கழக ஆட்சிக்குழுவால் நியமிக்கப்பட்ட இருவரில் மஜார் ஆசிப்பும் உறுப்பினராக இருந்து போராடும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் எதிரானவராக, நிர்வாகத்தின் கைப்பாவையாக தன்னை முழுமையாக முன்னிறுத்திக் கொண்டார். பல்கலைக்கழகத்தின் தலைமைக் கண்காணிப்பு அதிகாரியாக தற்போது பொறுப்பேற்று பணியாற்றி வரும் மஜார் ஆசிப் என்ற இந்த முன்னாள் மாணவர் தன்னுடைய ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்.

வரைவறிக்கையில் மஜார் ஆசிப் குறித்து, ”பேராசிரியர் மஜார் ஆசிப்பிடம் இருந்த மொழிகள் குறித்த புலமை, செம்மொழிகள் மற்றும் நவீன மொழிகளின் வளர்ச்சி குறித்த பிரச்சனைகளின் மீது கொண்டிருக்கும் விமர்சன அறிவு ஆகியவை மொழி தொடர்பான பகுதிகளில் விரிவான கொள்கையை வரையறுப்பதற்கு மையமாக இருந்தன” என்று கஸ்தூரிரங்கன் குறிப்பிட்டு எழுதுகிறார். மொழி தொடர்பாக தன்னுடைய பெரும் பங்கை அளித்த மஜார் ஆசிப்பின் உதவியுடன் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்ட அந்த வரைவறிக்கையில், “மூன்று மொழிகளைக் கற்பதற்கான வாய்ப்புகள் மழலைக் கல்விப் பருவத்தில் அல்லது ஒன்றாம் வகுப்பில் இருந்தே வழங்கப்படும். ஐந்தாம் வகுப்பு வரையிலும் பயிற்றுமொழியாக தாய்மொழி பயன்படுத்தப்படும். ஆறாம் வகுப்பில் இருந்து ஹிந்தி பேசுகின்ற மாநிலங்களில் ஹிந்தி, ஆங்கிலம், மற்றுமொரு நவீன இந்திய மொழி என்பதாகவும், ஹிந்தி பேசாத மாநிலங்களில் அந்த மாநில மொழி, ஹிந்தி, ஆங்கிலம் என்பதாகவும் மொழிக் கொள்கை இருக்கும். பல மொழிகளில் கல்வியறிவு பெறுவது நாட்டை ஒருங்கிணைக்க உதவுவதாக இருக்கும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தக் கருத்துக்கள் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்த போது, கொள்கை வரைவறிக்கை கஸ்தூரிரங்கனால் திருத்தி அமைக்கப்பட்டது. இவ்வாறு மும்மொழிக் கொள்கை தொடர்பாக ஹிந்தி பேசாத மாநிலங்களில் பிரச்சனை எழுந்து, வரைவறிக்கை திருத்தப்பட்டு வெளியிட்ட உடனேயே, வரைவறிக்கை குழுவில் உறுப்பினர்களாக இருந்த திரிபாதி மற்றும் குரீல் ஆகியோர் மே 31 அன்று அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்ட வரைவையே தாங்கள் ஆதரிப்பதாகவும், அதனை மாற்றியமைப்பதால் மும்மொழிக் கொள்கை பொருளற்றதாகி விடும் என்றும் கூறி தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர். ஓரிரு நாட்களுக்குள்ளாகவே  மஜார் ஆசிப்பும் அதே போன்ற கருத்தை வெளியிட்டார்.

அவரது ஆட்சேபம் குறித்து மஜார் ஆசிப்பிடம் கேட்கப்பட்ட போது, அந்த மொழித் துறை அறிஞர், “அடிப்படைக் கல்வி தாய் மொழியில் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்பதாக அறிவியல் ஆய்வுகள் சொல்கின்றன. கடந்த எழுபது ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற கல்விக் கொள்கைகள் அனைத்திலும்  மாற்றப்படாது ஒரே விதமான மொழிக் கொள்கையையே நாம் பின்பற்றி வந்திருக்கிறோம். ஒவ்வொருவரும் தாங்கள் பயில வேண்டும் என்று ஆசைப்படுகின்ற மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான வாய்ப்பை இப்போதாவது நாம் வழங்க வேண்டும். இந்தியாவில் இருக்கின்ற அனைவரும் புரிந்து கொள்கிற மொழியை, இந்தியாவிற்கான பொதுமொழியாகத் தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பை உருவாக்க வேண்டும். அந்த பொது மொழி ஆங்கிலமாக இருக்க முடியாது” என்று கருத்து தெரிவிக்கிறார். இந்தியாவில் உள்ள மக்களில் 54% பேர் ஹிந்தி பேசுபவர்களாக இருக்கின்ற நிலையில், பெரும் வசதி படைத்த 15% பேர் மட்டுமே ஆங்கிலத்தில் பேசக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்று வரைவறிக்கையில் இருப்பதை திரும்பச் சொல்கிறார்.

மேலும் ”அனைத்து உறுப்பினர்களும் கையொப்பமிட்டே வரைவறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு எங்களுடைய வேலை முடிந்து விட்டது. அரசாங்கம்தான் இனிமேல் முடிவு செய்ய வேண்டும். குழுத் தலைவர் செய்து இருப்பது குறித்து கருத்து எதுவும் நான் தெரிவிக்க முடியாது. என்னுடைய முழு ஆதரவும் அனைத்து உறுப்பினர்களும் கையொப்பமிட்டு சமர்ப்பிக்கப்பட்ட வரைவறிக்கைக்கானதாகவே இருக்கிறது” என்று கூறிய மஜார் ஆசிப் தன்னுடைய எதிர்ப்பை இதுவரை எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை என்றும், இது முற்றிலும் வரைவறிக்கை குழு தொடர்பான விஷயம் என்பதால் பொதுவெளியில் அது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறி நழுவிக் கொண்டார்.

”நான் மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறேன். யார் மீதும் எந்தவொரு மொழியும் திணிக்கப்படுவதை நான் ஆதரிக்கவில்லை. ஆனாலும் அனைவருக்குமான தொடர்பு மொழி இருக்க வேண்டும். மகாத்மா காந்தி, சர்தார் பட்டேல், அபுல் கலாம் ஆசாத் ஆகியோரின் ஆதரவு பெற்ற அரசியலமைப்பு சட்டத்தில், இந்தியாவின் அலுவலக மொழியாக தேவநகரியில் எழுதப்படுகின்ற ஹிந்தி மொழி இருக்கும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.  அனைத்து நாடுகளும் தங்களுக்கான தொடர்பு மொழியைக் கொண்டிருக்கும் போது, இவ்வளவு ஆண்டு காலத்திற்குப் பிறகும் நமக்கான தொடர்பு மொழியை நம்மால் உருவாக்கிக் கொள்ள முடியாதது வேதனைக்குரியதாக இருக்கிறது’ என்று வருத்தப்பட்டார்.     

வரைவறிக்கை தயாரிப்புக் குழுவில் இடம் பெற்றிருந்த ஒருவருக்கு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உடனேயே பேராசிரியர் பதவி, பணியில் சேர்ந்த உடனேயே பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் நியமனம் என்று அனைத்தும் வலிந்து அளிக்கப்படும் போது, ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கெதிராக ஆசிரியர், மாணவர் விரோதப் போக்கின்றி அவர் செயல்படுவார், பொது மக்களின் நலம் குறித்த அக்கறை கொண்டவராக அவர் இருப்பார் என்பதை நாம் எதிர்பார்க்க முடியுமா? அவரின் பின்புலத்தில் நடந்திருக்கக்கூடியவற்றை யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது?