tamilnadu

குடி போதையில் உறவினரை குத்தி கொலை செய்தவர் கைது

தேனி ,மே.8- ஆண்டிபட்டி அருகே குடிபோதையில் மைத்துனரை கத்தியால் குத்தி கொலை செய்தவரை காவல்துறையினர்  வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.  ஆண்டிபட்டி அருகே கே.காமாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் 45 பால் பண்ணை  நடத்தி வந்தார். இவருக்கு சுதா என்ற மனைவியும் ஒரு ஆண் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவியின் உடன் பிறந்த சகோதரர் பாண்டி 35 அதே ஊரில் வசித்து வருகிறார். மாமன் -மைத்துனர் இருவருக்கும்  குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது  மேலும் இருவரும் அடிக்கடி மது குடித்துவிட்டு தகராறில் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது.

 இந்நிலையில் வியாழக்கிழமை இரவு ஊரின் ஒதுக்குப்புறத்தில் மதுபானம் குடித்து கொண்டிருக்கும் போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.இந்த தகராறில் பாண்டி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குணசேகரனை இடது பக்கம் மார்பில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு  ராஜதானி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர் அங்கே குணசேகரனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர் . இதனை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக  தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ராஜதானி காவல்துறையினர்  தலைமறைவாக இருந்த பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.