தூத்துக்குடி:
தூத்துக்குடியில் மே 4, 5 ஆகிய தேதி களில் வணிகர் சங்க பேரவை சார்பில் சுதேசி பொருளாதார பிரகடன மாநாடு நடக்கிறது.இதுகுறித்து வணிகர் சங்க பேரவையின் தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவர் பா.விநாயகமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் தூத்துக்குடியில் மே 4, 5 ஆகிய தேதிகளில் சுதேசி பொருளாதார பிரகடன மாநாடு நடக்கிறது. 4ந் தேதி காலை 10 மணிக்கு வணிகர் சங்க பேரவையின் மாநில தலைவர் த.வெள்ளையன் மாநாட்டு திடலை திறந்து வைக்கிறார். சுதேசி கண்காட்சியையும் அவர் தொடங்கி வைக்கிறார். மாலை 5 மணிக்கு வணிகர்கள் பங்கேற்கும் பேரணி, 3வது மைல் பகுதியில் இருந்து துவங்குகிறது. 5 ஆம் தேதியன்று நகர வர்த்தக சங்க முன்னாள் தலைவர் நடராஜன் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.. நெல்லை பேட்டை சங்க தலைவர் சுல்தான் வணிகர் சங்க கொடியை ஏற்றி வைக்கிறார். நிலா சீ புட்ஸ் நிர்வாக இயக்குனர் செல்வின் பிரபு மாநாட்டு பந்தலை திறந்து வைக்கிறார். தொடர்ந்து விழாவை மாநில தலைவர் வெள்ளையன் தொடங்கி வைக்கிறார்.
பாவூர்சத்திரத்தை சேர்ந்த ராமச்சந்திரன், தூத்துக்குடி பொன்.தனகரன் ஆகியோர் தொடக்கவுரை ஆற்றுகின்றனர். முன்னாள் எம்.பியான ஷியாம் பிஹாரி மிஸ்ரா மற்றும் பலர் சிறப்புரை ஆற்றுகின்றனர். பகல் 1 மணியளவில் கண்ணீரால் காத்தோம்; கருகத் திருவுளமோ எனும் தலைப்பில் விவாத அரங்கம் நடக்கிறது. மேலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன.
விழா அரங்கத்தில் 2 நாட்களும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் குழந்தைகளுக்கான ராட்டினங்கள், விளையாட்டு கார், பைக்குகள், துள்ளி குதித்து விளையாட ராட்ஷச பலூன்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன. எனவே வணிகர்கள் அனைவரும் குடும்பத்தோடு பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொண்டு உள்ளோம். இந்த மாநாட்டில் 50,000 பேர் முதல் 60,000 பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு பா.விநாயகமூர்த்தி கூறினார்.பேட்டியின் போது, வணிகர் சங்க பேரவையின் மாவட்ட செயலாளர் த.பாஸ்கர், பொருளாளர் ஆ.செந்தில் ஆறு முகம், மாநில இளைஞரணி அமைப்பாளர் சொ.ராஜா மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.