தூத்துக்குடி, ஜூன் 15- தூத்துக்குடியில் 82 நாட்களுக்குப் பிறகு தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 முதல் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் வழங்கப்பட்டு 8 மண்டலங்களாக தமிழகம் பிரிக்கப்பட்டது. முதலில் அரசுப் பேருந்து சேவைகள் மட்டும் தொடங்கியது. ஆனால் தனியார் பேருந்துகள் மற்றும் மினி பேருந்துகள் இயங்காமல் இருந்தது. இந்நிலையில் தூத்துக்குடியில் 82 நாட்களுக்கு பிறகு தனியார் பேருந்துகள் மற்றும் மினி பேருந்துகள் திங்களன்று முதல் இயக்கப்பட்டது. தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து தாளமுத்துநகர், மடத்தூர் ஆகிய பகுதிகளுக்கு மினி பேருந்துகள் இயக்கப்பட்டன. கோவில்பட்டி, திருச்செந்தூர், திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன. பேருந்தில் பயணம் செய்வோர் முகக்கவசம் அணிவது, இடைவெளி விட்டு அமர்வது உள்ளிட்ட விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. 82 நாட்களுக்கு பிறகு தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டதால் நிறுவனங்களில் வேலை செய்வோர் மற்றும் கூலி வேலைக்கு செல்வோர் மகிழ்ச்சியடைந்தனர்.