tamilnadu

img

கொரோனா ஊரடங்கால் முடங்கி விடாமல் மாற்றுப்பாதையை உருவாக்கிய அண்ணன், தங்கை

தூத்துக்குடி, ஜூலை 29- தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் அருகே ஊடரங்கு காலத்தில் தன்னுடைய முன்னோர் செய்த பனையேறும் தொழிலைச் செய்து 11ம் வகுப்பு மாணவர் அசத்தி வரு கிறார். அவருக்கு உதவியாக 8 ம் வகுப்பு படிக்கும் தங்கை பதநீர் காய்ச்சி வருகிறார்.  உலகம் முழுவதும் கொரோனா பிடியிலிருந்து மீண்டு வர வழி தெரியாமல் அனைத்து தரப்பு மக்களும் தவித்து வரு கின்றனர். இதில் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஊரடங்கு உத்தரவானது தற்போது வரை நீடித்து வருகிறது. தமிழகத்தில்  லட்சக்கணக்கானோர் தங்க ளது வேலை மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து  வருகின்றனர். பலரும் தங்களது முன்னோர் செய்த தொழிலை மீண்டும் செய்து சாதனை புரிந்து வருகின்றனர்.

இதில் 18 வயது நிரம்பிய வாலிபர் தனது படிப்பின் இடை யில் தங்கள் முன்னோர் தொழிலான பனையேறும் தொழி லைச் செய்து வருகிறார். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீ வைகுண்டம் அருகே உள்ள வல்லகுளம் பஞ்சாயத்து அரசர்குளத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். உப்பு வியாபாரி. இவரது மனைவி கோசலை. இவரும் தினமும் கூலி தொழில் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவரது மகன் கிருஷ்ணபெருமாள். இராமானுஜம் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த வருடம் 11-ம் வகுப்பு முடித்துள்ளார். மகள் கண்ணகி அதே பள்ளியில் 8 ம் வகுப்பு முடித்துள்ளார். ஊரடங்கு நேரத்தில் முன்னோர் செய்த தொழிலான பனை ஏற வேண்டும் என கிருஷ்ணபெருமாள் முடிவு செய்தார். எனவே தனது தங்கை கண்ணகியுடன் கலந்து ஆலோசித்தார்.

தான் பனை ஏறி தங்கை பதனீர் காய்க்க முடிவு செய்தனர். தினமும் காலையில் மொபெட்டில் தங்கை கண்ணகியை ஏற்றிக் கொண்டு அதிகாலை 5.30 மணி அளவில் பனங்காட்டுக்குச் செல்வார். கிருஷ்ண பெருமாள் தினமும் சுமார் 5 பனையேறுவார். தங்கை கண்ணகி அவருக்குத் துணையாகப் பனையிலிருந்து இறக்கும் பத நீரைக் காய்க்கும் இடத்திற்கு எடுத்துச் சென்று, பாத்தி ரத்தில் ஊற்றி சுமார் 2 மணி நேரம் அந்த நெருப்பைப் பற்றவைத்து, காய்த்து தேங்காய் சிரட்டையில் ஊற்றி அதனைப் பக்குவப்படுத்தி கருப்பட்டியாக மாற்றி அதனை விற்கின்றனர். இதனால் தினமும் தாய் தந்தையருககு உதவியாகப் பணம் கிடைக்கிறது. இது குறித்து வாலிபர் கிருஷ்ண பெருமாள் கூறும்போது, இந்த கொரோனா ஊரடங்கால் நாங்கள் வீட்டிலிருந்து கொண்டிருந்தோம். அப்போது எனது தாத்தா பனையேறும் தொழிலைச் செய்து வந்தது எனக்கு ஞாபகம் வந்தது. அந்த தொழிலை நாம் ஏன் செய்யக் கூடாது என்று நினைத்தேன்.

அதன் காரணமாக எங்கள் ஊர் அருகே உள்ள பனைமரக்காட்டில் சென்று தினமும் அதிகாலை 5.30 மணிக்கு பனையேறச் செல்வேன். அப்போது எனது தங்கையும் உடன் வந்து எனக்கு வேண்டிய உதவிகளைச் செய்வார். மேலும் அந்த காலத்தில் எங்கள் பகுதியில் அதிக அளவில் பனையேறும் தொழில் செய்து வந்தார்கள். ஆனால் தற்போது எங்கள் ஊரில் ஒரு வயதானவர் மட்டுமே செய்து வருகிறார். காரணம் அந்த காலத்தில் பனை யிலிருந்து கீழே விழுந்தால் மரணம் தான். எனவே அந்த பணியினை காலங்கள் கடக்கக் கடக்க அனைவரும் விட்டு விட்டனர். தற்போது நான் இந்த நான் பனையேறும் தொழிலைச் செய்து வருகிறேன். எனவே இளைஞர்கள் இந்த பணியில் ஈடுபட அரசு பனையேறும் தொழிலுக்கு நவீன யுக்திகளைப் புகுத்த வேண்டும் என்றும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து கிருஷ்ண பெருமாளின் தங்கை கூறும்போது, எனது தந்தை உப்பு வியாபாரத்திற்குக் கிளம்பும் போது நானும் எனது சகோதரனுடன் பனையே றும் இடத்திற்கு வந்து விடுவோம்.

அண்ணனுக்கு உதவி யாக இருப்பேன். பின்னர் அண்ணனிடம் பதநீரை பெற்றுக் கொண்டு அதனை விடுதியில் வைத்துக் காய்த்து கருப்பட்டியாக்கி விற்று எங்கள் குடும்பத்திற்குத் தேவை யான பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்கிறோம். மேலும் இந்த ஊரடங்கை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்கிறோம் என்றார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும்போது, ஒரு காலத்தில் பனை ஏறும் தொழிலாளிகள் நூற்றுக் கணக்கில் இருந்த ஊர் தற்போது, அவர்கள் வாரிசுகள் மற்ற வேலை தேடி வெளியூர் சென்ற காரணத்தினால் நலிந்து விட்டது. ஒரு காலத்தில் பனை ஏறினால் திருமணத்திற்கு பெண் தர மறுத்தார்கள். எனவே வாலிபர்கள் இந்த தொழிலை முழுவதும் மறந்து விட்டனர்.

கரோனா தொற்று நோய் காரணமாகக் கிராமத்தினை நோக்கி வந்தவர்கள், தங்கள் முன்னோர்கள் விட்டுச் சென்ற தொழிலையும் நினைத்து பார்க்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் பனை வெல்லக் கூட்டுறவுச் சங்கம் உள்ளது. அந்த சங்கம் மூலமாக நலிவடைந்த இந்த தொழிலை இளைஞர்கள் மத்தியில் ஊககுவிக்க உட னடியாக நவீன பனை ஏறும் இயந்திரங்களை வழங்க வேண்டும். பனை தொழிலுக்கு ஏற்ற மானியம் வழங்க வேண்டும். பனை தொழிலில் கிடைக்கும் பொருள்களை நல்ல விலையில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.