தூத்துக்குடி, ஜூன் 6-தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவுக்கு தூத்துக்குடி பிரையன்ட் நகர் பகுதி வணிகர்கள் திரளான வரவேற்பு அளித்தனர்.இதைத்தொடர்ந்து விக்ரமராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழக அரசு 24 மணி நேரம் கடைகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வணிகர்கள் மத்தியில் வரவேற்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு பல கட்ட போராட்டங்களை இதற்காக நடத்தியிருக்கிறது. அதன் பயனாக தமிழகம் முழுவதும் 24 நேரமும் வணிக கடைகள் திறந்திருக்க வியாழனன்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதை தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு வரவேற்கிறது. மேலும் கடை திறக்கும் வணிகர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாத வகையில் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார்.மேலும் இந்த வாய்ப்பை பொதுமக்களுக்கு சேவை செய்யும் நோக்கோடு வணிகர்கள் பயன் படுத்துவார்கள். குறிப்பாக, வணிக கடைகளில் காவல்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி தமிழகம் முழுவதும் இரவு நேர கடைகளில் பாதுகாப்பு மற்றும் காவல்துறைக்கு உதவிடும் வகையில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த தமிழ்நாடு வணிகர்சங்க பேரமைப்பு வலியுறுத்தும். தமிழக அரசின் அறிவிப்புக்கு பிறகும் இரவில்வணிகத்தில் ஈடுபடும் வியாபாரிகளை கொச்சைப்படுத்தும் வகையில் காவல்துறையினர் நடந்திடக்கூடாது என்றார்.