tamilnadu

தூத்துக்குடி துறைமுக  அதிகாரிக்கு கொரோனா ஊழியர்களுக்கு பரிசோதனை

தூத்துக்குடி,ஜூலை 1- தூத்துக்குடி துறைமுக அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கணக்குத்துறை நிர்வாக அலுவலகம் மூடப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் தலைமை கணக்கு அதிகாரியாக பணிபுரியும் நபர், கடந்த வாரம் அலுவல் தொடர்பாக சென்னைக்கு சென்றுவிட்டு கடந்த 24ம் தேதி தூத்துக்குடி வந்துள்ளார். பின்னர் 24, 25 ஆகிய தேதிகளில் அலுவலகம் வந்து பணிகளை கவனித்துள்ளார். இதன் பின்னர் கடந்த 26ம் தேதி அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்தபோது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது செவ்வாயன்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து வஉசி துறைமுகத்தில் கணக்குத்துறை நிர்வாகம் அலுவலகம் வருகிற 5 ஆம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில் சுமார் 200 பேர் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் துறைமுக மருத்துவமனையில் புதனன்று சளி மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது.

;