tamilnadu

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்ய புதிய தானியங்கி கருவி அறிமுகம்

தூத்துக்குடி, ஜூன் 27- தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்ய புதிய தானியங்கி கருவி அறிமுகப்படு த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது: தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இதுவரை இங்கு 25 ஆயிரம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த ஆய்வகத்திற்கு ரூ.22 லட்சம் மதிப்புள்ள நவீன தானியங்கி ஆர்.என்.ஏ பிரித்தெடுப்பான் கருவியை தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்த இயந்திரம் ஆர்டி பிசிஆர் பரிசோதனையின் முதல் கட்டமான த்ரோட் ஸ்வாப் மற்றும் நாசல் ஸ்வாப்-ல் உள்ள ஆர்என்ஏ மரபணுக்கள் பிரித்தெடுக்கும் வேலையில் மனித தலையீட்டை குறைத்து, தானியங்கி முறையில் மிக துரிதமாக செய்து முடிக்கிறது.  இதன் மூலம் ஆர்டி பிசிஆர் பரிசோதனை முடிவுகளை விரைவாக தெரிந்து கொள்ள முடியும். மேலும் பரிசோதனைகள் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். வழக்கமாக நாள் ஒன்றுக்கு 500 பரிசோதனைகள் செய்து வந்த நிலையில், இந்த தானியங்கி கருவி மூலம் அதிகபட்சம் 800 பரிசோதனைகள் வரை செய்ய இயலும்.