tamilnadu

ரூ.80 கோடி தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம்

தூத்துக்குடி,மார்ச் 29
  தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, கழுகுமலை, எட்டயபுரம், நாலாட்டின்புத்தூா், இளையரசனேந்தல், விருதுநகா் மாவட்டம் சாத்தூா், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் பகுதி இயந்திரம், முழு இயந்திரம் மற்றும் கையால் தயாரிக்கப்படும் தீப்பெட்டி ஆலைகள் ஏராளமாக உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான தொழிலாளா்கள் தீப்பெட்டித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.
கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவும் நிலை ஏற்பட்டதை அறிந்த தமிழக அரசு, கேரளத்திலிருந்து தமிழகம் வரும் அனைத்து லாரிகளுக்கும் தடை விதித்தது. இந்நிலையில், தீப்பெட்டித் தொழிலுக்கான மூலப்பொருள்களில் ஒன்றான குச்சிகள் மற்றும் மரத்தடிகள் கடந்த 20 நாள்களுக்கு மேலாகவே வருவது தடைபட்டது. இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும்விதமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தீப்பெட்டித் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு மட்டுமன்றி, வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படும் தீப்பெட்டி பண்டல்கள் தேங்கிக் கிடக்கின்றன. ரூ. 80 கோடி தீப்பெட்டி பண்டல்கள் தேக்கமடைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனா்.