tamilnadu

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

அயோத்தி விமான நிலையத்திற்கு ராமர் பெயர்!

அயோத்தியில் முன்மொழியப்பட்ட விமான நிலையத்திற்கு, மரியாதை புருஷோத்தமரான ஸ்ரீராம பகவானின் (Maryada Purushottam Shriram) பெயர் சூட்டப்படும் என்றும், 2021 டிசம்பருக்குள் விமான நிலைய பணிகள் முடிக்கப்பட்டு, சர்வதேச விமான நிலைய அந்தஸ்தைப் பெறும் என்றும் உத்தரப்பிரதேச சாமியார் முதல்வர் ஆதித்யநாத் கூறியுள்ளார். ராமர் விமான நிலையத்திற்காக ஏற்கெனவே ரூ. 300 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ள நிலையில், விமானநிலைய கட்டுமானத்திற்காக மேலும் ரூ. 525 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய ஆதித்யநாத் அரசுஒப்புதல் அளித்துள்ளது என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நந்த் கோபால் நந்தி தெரிவித்துள்ளார்.

                                             ***********************

வெளிநாட்டுக்குப் பணம் அனுப்பினால் 5% டிசிஎஸ் வரி

வெளிநாடுகளுக்கு ரூ.7 லட்சத்திற்கு மேல் அனுப்பப்படும் பணத்திற்கு 5 சதவிகிதம் டிசிஎஸ் வரி (Tax Collected at Source)விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சுற்றுலா பேக்கேஜ் அல்லாத கட்டணங்களுக்கு மட்டுமேரூ. 7 லட்சத்திற்கு மேலான வரம்பு பொருந்தும். ஆதார், பான் கார்டு இணைக்கப்படாத பரிவர்த்தனைகளுக்கு 10 சதவிகித டிசிஎஸ் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ள மத்திய அரசு, இப்புதிய டிசிஎஸ் முறை அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது.

                                             ***********************

பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறும் பஸ்வான்?

தலித் தலைவரான ராம்விலாஸ் பஸ்வான், பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதல் இடங்களைக் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்தார். ஆனால், அதனை ஏற்காத பாஜக - ஜேடியு கூட்டணி, மற்றொரு தலித் தலைவரான ஜிதன்ராம் மாஞ்சியை கூட்டணியில் சேர்ந்து, அண்மையில் பஸ்வானுக்கு ‘செக்’ வைத்தது. கொடுக்கும் இடங்களை வாங்கிக் கொண்டு கூட்டணியில் இருந்தால் இருங்கள்; இல்லாவிட்டால் எங்களுக்கு ஜிதன்ராம் மாஞ்சியே போதும் என்று மறைமுகமாக கூறிவிட்டது. இதையடுத்து பஸ்வானின் லோக் ஜனசக்தி, விரைவில் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

                                             ***********************

அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 7 இந்தியர்கள்..

அமெரிக்காவின் 400 பெரிய பணக்காரர்களுக்கான பட்டியலை ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் 7 பேர் இடம் பெற்றுள்ளனர். ஜிஸ்கேலர் (Zscaler) நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான ஜே சவுத்ரி, ‘சிம்போனி டெக்னாலஜி’ நிறுவனர் ரமேஷ் வத்வானி, ‘வேபேர்’ (Wayfair) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி நீரஜ் சிங் கோஸ்லா, ‘வென்சர்ஸ்’ நிறுவனர் வொனோத் கோஸ்லா, ‘ஷெர்பலோ வென்சர்ஸ்’ நிறுவனத்தின் மேனேஜிங் பார்ட்னர் கவிதார்க் ராம் ஸ்ரீராம், ராகேஷ் கங்வால், ‘வொர்க்டே’நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி அனீல் பூஸ்ரி ஆகியோரே அந்த 7 பேர் ஆவர்.

                                             ***********************

மத்திய அரசின் நிவாரண நிதி புள்ளிவிவரம் வெளியீடு!

\பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் 33 கோடி பேருக்குரூ. 31 ஆயிரத்து 235 கோடி நிதியுதவி வழங்கப்பட்டு உள்ளதாக மத்தியஅரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி, 39 கோடியே 27 லட்சம் பயனாளிகள் இலவச உணவு தானியங்களை இத்திட்டத்தின் கீழ் பெற்றுள்ளனர். தேசிய சமூக உதவித் திட்டத்தின் கீழ் சுமார் 2 கோடியே 82 லட்சம் முதியவர்கள், விதவைகள் மற்றும் ஊனமுற்றோருக்கு ரூ. ஆயிரத்து 405 கோடி, 2 கோடியே 17 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ. 3 ஆயிரத்து 497 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றும் கணக்கு காட்டியுள்ளது.

                                             ***********************

பாஜக-விலிருந்து விலகும் சுப்பிரமணியசாமி..?
பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியசாமி, தன்னைப் பற்றி தனது கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியினரே (IT Wing) அவதூறு பரப்புவதாக அண்மையில் கூறியிருந்தார். ஐடி விங் தலைவர் அமித் மால்வியா-தான் இதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தார். தற்போது, அமித் மால்வியாவை ஐடிவிங் தலைவர் பதவியில் இருந்து நீக்கியே ஆக வேண்டும் என பாஜக தலைவர் நட்டாவுக்கு அவர் கெடு விதித்துள்ளார். “அமித் மால்வியாவை நீக்காவிட்டால் பாஜக என்னை பாதுகாக்கவில்லை; பாஜக-வில் எனக்கு இடம் இல்லை என்று அர்த்தம். இதனால் அடுத்த கட்டம் குறித்து கட்சி தொண்டர்களின் கருத்துகளை கேட்டு முடிவெடுப்பேன்” என்று டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

                                             ***********************

பயணிகள் வாகன விற்பனை 7 சதவிகிதம் வீழ்ச்சி!

ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் பயணிகள் வாகன விற்பனையில் 7 சதவிகிதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஆட்டோமொபைல் டீலர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் சில்லரை விற்பனையில் மொத்தம் 1 லட்சத்து 78 ஆயிரத்து 513 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. வாகனப் பதிவை அடிப்படையாகக் கொண்டு இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆகஸ்ட் மாதத்தில் 1 லட்சத்து 92 ஆயிரத்து 189 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

                                             ***********************

ஜனாதிபதி மாளிகையில் ராணுவ வீரர் தற்கொலை!

நேபாளத்தின் திகயான் பகுதியைச் சேர்ந்தவர் தேக் பகதூர் தபா (40). இவர், இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள கோர்கா ரைபிள்ஸ் படை வீரர்களுக்கான விடுதியில் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டிருந்த நிலையில், புதனன்று அதிகாலை 4 மணியளவில் மின் விசிறியில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவருக்கு கடுமையான முதுகு வலியும், உயர் ரத்த அழுத்தமும் இருந்ததாகவும், இதில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தில்லி காவல் உதவி ஆணையர் தீபக் யாதவ்  தெரிவித்துள்ளார்.

                                             ***********************

தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

பல்கலைக்கழகம், கல்லூரிகளில் நடத்தப்படும் தேர்வுகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்களை அமைக்கக் கூடாது, தேர்வு எழுதும் மாணவர்கள் 6 அடி இடைவெளி விட்டு தேர்வு எழுத வேண்டும்,  தேர்வு நடத்தும் பல்கலைக்கழகம், கல்லூரிகள் புதிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.