ஐந்து பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குத் தாரை வார்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம் கார்போரேஷன் (BPCL), ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (Shipping Corp of India), கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (ConCor) ஆகிய நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்து ரூ.78,400 கோடி நிதி திரட்ட மத்திய முடிவு செய்துள்ளதாகவும், டி.ஹெச்.டி.சி இந்தியா (THDC India) மற்றும் நார்த் ஈஸ்டர்ன் எலக்ட் ரிக் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (NEEPCO) பங்குகளை அரசுக்கு சொந்தமான என்.டி.பி.சி நிறுவனத்திற்கு விற்பனை செய்ய அமைச்சரவை, கடந்த புதன் கிழமையன்று ஒப்புதல் அளித்துள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சந்தை மதிப்பில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 53.3 சதவீத பங்குகளை விற்பனை செய்து ரூ.63,000 கோடி நிதி திரட்டவும், ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தின் 63.7 சதவீத பங்குகளை விற்பனை செய்து ரூ.2,000 கோடி நிதி திரட்டவும், கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தின் 30.8 சதவீத பங்குகளை விற்பனை செய்து ரூ. 13,400 கோடி நிதி திரட்டவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.