tamilnadu

img

தமிழகத்தின் புராதன கோவில்களை மத்திய தொல்லியல் துறை கையகப்படுத்தக்கூடாது திருவாரூரில் கே.பாலகிருஷ்ணன் பேட்டி

திருவாரூர்,மார்ச் 5-   தமிழகத்தின் புராதன கோவில் களை மத்திய தொல்லியல் துறை  கையகப்படுத்தக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் வியாழனன்று செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மக்கள்  தொகை பதிவேட்டிற்கான (என்பிஆர்) பணிகளை துவங்குவதாக தமிழக அரசு அறிவித்து, அதற்கான கேள்வி களையும் வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்ட னத்தை தெரிவிக்கிறது.  என்பிஆர், என்ஆர்சி (தேசிய குடி மக்கள் பதிவேடு) ஆகியவற்றை   செயல்படுத்தமாட்டோம் என்று இதர மாநிலங்களைப் போல  தமிழக முதல்வர் அறிவிக்கக்கோரி தமிழ கம் முழுவதும் மக்கள் பல கட்ட  போராட்டங்களை நடத்தி வரு கின்றனர். இஸ்லாமியர்கள் ஒருபக்கம் போராடுகிறார்கள். மதச்சார்பற்ற கட்சி கள் ஒரு பக்கம் போராடுகின்றன. பல்வேறு அமைப்புகள் போராடு கின்றன. இவ்வளவு போராட்டங்கள் நடந்தும்கூட, என்பிஆர்,என்ஆர்சியை செயல்படுத்த மாட்டோம் என்று தமிழக முதல்வர் அறிவிக்க மறுக்கிறார். கேரளா, ஆந்திரா,தெலுங்கானா மாநில முதல்வர்களும் ,புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்வரும் என்பி ஆர், என்ஆர்சியை செயல்படுத்த மாட்டோம் என்று அறிவித்துவிட்டனர்.  ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இச்சட்டத்தை ஆதரித்தும் இச்சட்டத்தால் ஒரு பாதிப்பும் வராது என்றும்  விளக்கம் கொடுத்துக் கொண்டி ருக்கிறார். தில்லியில் வன்முறை ஏற்பட்டு 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்களே, இது எதனால் நடந்தது. மத்திய அரசிடம் சில கேள்வி களுக்கு விளக்கம் கேட்டுள்ளோம் என்றும் முதல்வர் சொல்கிறார். மத்திய பாஜக அரசை எதிர்த்து அதிமுக அரசு குரல் கொடுக்க தயாராகஇல்லை.  என்பிஆர் எனும் மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பு பணிக்கு அனு மதியளித்துவிட்டால், அது என்ஆர்சி  எனும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்புக்கும் சிஏஏ எனும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாக்கத்திற்கும் அதுவாகவே கொண்டுசென்றுவிடும். இதனை யாரும் தடுத்திட முடியாது. இதனால்தான் வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறை வேற்றக்கோரியும்  மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பை செயல்படுத்த மாட்டோம் என்று அறிவிக்கக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  சார்பில் மார்ச் 9 அன்று சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தவுள்ளோம்.  குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வில்லையெனில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும். இதற்கு அதிமுக அரசே காரணமாக இருக்கும். 

கோவில் மூலம் மூக்கை நுழைக்கும் பாஜக அரசு
தமிழகத்தில் 100 ஆண்டுகள் பழமையான கோவில்களை மத்திய தொல்லியல் துறை கையகப்படுத்தும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார். இதன்படி தமிழகத்தில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புராதன கோவில்களின் நிர்வாகம் மத்திய அரசிடம் வந்துவிடும்.இதுவொரு மோசமான,தேவையற்ற நடவடிக்கை. கோவில்களை கையகப் படுத்துவதன் மூலம் மத்திய அரசு, தமிழகத்தில் மூக்கை நுழைக்கக் கூடிய நடவடிக்கை ஆகும். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மை யாகக் கண்டிக்கிறது. ஏற்கெனவே மத்திய தொல்லியல் துறையால் தமிழகத்திற்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் தெரியும். ராஜராஜ சோழ னால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவிலுக்குள் அவருக்கு சிலை அமைக்க மத்திய தொல்லியல் துறை அனுமதிக்கவில்லை.  வீடுகள்-வியாபாரிகளுக்கு பாதிப்பு மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் ஒரு கோவில் வந்து விட்டால், அக்கோவிலைச் சுற்றி நூறு மீட்டருக்குள் எந்த கட்டுமானமும் இருக்கக்கூடாது. இருக்கின்ற கட்டு மானங்களை அப்புறப்படுத்த வேண்டும். திருவாரூர் கோவிலைச் சுற்றி நூறு மீட்டருக்குள் இருக்கின்ற வீடுகளை இடிக்க வேண்டுமெனில் என்னாகும்? தமிழ கத்தில் உள்ள கோவில்களைச் சுற்றி பூ விற்பவர்கள் போன்ற சாதாரண சிறு வியாபாரிகள் உள்ளனர். இவர்களை அப்புறப்படுத்தும் நிலைமை ஏற்படும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வந்து விட்டால் கோவில்களில் பூஜைகள் சமஸ்கிருத மொழியில்தான் நடைபெறும். தமிழ் மொழி புறக்கணிக்கப்படும். மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதனை அனுமதிக்கக்கூடாது. இறை நம்பிக்கை யுடையவர்களுக்கு கூட இச்செயல் நியாயமாக இருக்காது.  கோவில் நிலங்களில் குடியிருப்பவர்கள், சாகுபடி செய்பவர்கள் ஆகியோருக்கு அந்த நிலங்களை சொந்தமாக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகள் நீண்டகாலமாக போராட்டங்களை நடத்தி வருகின்றோம். இதனால் கோவில் நிலங்களில் குடியிருப்ப வர்களுக்கு பட்டா வழங்கும் ஆணையை தமிழக அரசு வெளியிட்டது. இதற்கு எதிராக சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, தடையாணை பெறப்பட்டு, விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு உறுதியாக வாதாடி, கோவில் நிலங்கள், வக்போர்டு நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு அதனை சொந்த மாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.நிலங்களுக்குரிய பணத்தை தமிழக அரசு கோவில் பெயரில் டெபாசிட் செய்ய வேண்டும்.கோவில் நிலங்களை குடியிருப்ப வர்களுக்கு சொந்தமாக்கவில்லை என்றால் தலைமுறை தலைமுறையாக அவர்கள் குடிசை வீட்டில்தான் வாழ வேண்டிய நிலை ஏற்படும். கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களின் வாழ்வாதாரம் முக்கியமானது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர்கள் வி.மாரிமுத்து, ஐ.வி.நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர். 

;