tamilnadu

கால்நடை பெண் மருத்துவர்கள் பணி நேரத்தில் மாற்றம் வேண்டும் பிரியங்கா ரெட்டி இரங்கல் கூட்டத்தில் கோரிக்கை

மன்னார்குடி: ஹைதராபாத் புறநகர் பகுதியில் கூட்டு பாலியல்  வன்முறை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டிக்கு இரங்கல் கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கத்தின் மாவட்ட மையம் சார்பாக நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மண்டல இணை இயக்குநர் மரு ஐ.தனபால் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மரு ஜி.மகேந்திரன் முன்னுரையாற்றினார். மாநில தலைவர் மரு எஸ்.வீரமணி, கால்நடைத் துறை உதவி இயக்குநர் மரு ஜே. ஜான்சன் சார்லஸ், மரு. எம். விஜயகுமார், ரோட்டரியன் மரு பாலகிருஷ்ணன் சங்கத்தின் மகளிர் பிரிவு அமைப்பாளர் மரு. எஸ். காவியா காவிரி ரெங்கநாதன் உள்ளிட்டோர் பேசினார்கள். தமிழ்நாட்டில் பெண் கால்நடை மருத்துவர்களின் பணி நேரம் காலை 8 மணியிலிருந்து நண்பகல் 12 மணி வரையிலும் பிற்பகல் 3 மணியிலிருந்து மாலை 5 மணி வரையிலும் தற்போது உள்ளது. கிராமங்களில் குறிப்பாக தொலைதூர உள்கிராமங்களில் உள்ள மருத்துவமனை களில் பணிபுரியும் பெண் மருத்துவர்கள் கால்நடை பராமரிப்பு உதவியாளர் இல்லாமலும் பணி யாற்றுகின்றனர். அவர்களின் பணியிட பாதுகாப்பை உறுதி செய்திடவும்,  தமிழ்நாட்டில் சமூக விரோதிகளால் அவர்களுக்கு ஏதேனும் ஆபத்துகள் விளையாமல் பாதுகாத்திடவும் இப்பணி நேரத்தை  காலை 8 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரையிலோ அல்லது 9 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரை பணி நேர மாற்றம் செய்திட  துறை தலைமையும் மாநில அரசும் நடவடிக்கை எடுத்து நிறைவேற்றிட வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் சங்கத்தின் மாவட்ட இணைச் செயலாளர் மரு ராஜேஷ், கோட்டச் செயலாளர் மரு ஜே. ஜெயபால், மற்றும் 25 பெண் கால்நடை மருத்துவர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் திருவாரூர் மாவட்டம் முழுவதிலிருந்து வந்து கலந்து கொண்டனர். மெழுகுவர்த்தி சுடர்களின் மத்தியில் நடைபெற்ற இக்கூட்டத்தின் முடிவில் 2 நிமிட நேரம் அமைதியாக இருந்து அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.