tamilnadu

img

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை விடிய விடிய சோதனை

திருவள்ளூர், செப். 14- திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கனிமவளத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விடியவிடிய சோதனை நடத்தினர். இரண்டாவது நாளான சனிக்கிழமையன்றும்  சோதனை நடைபெற்றது. லஞ்சம் பெற்றுக்கொண்டு மணல் கொள்ளைக்கு துணை போதல், ஏரிகளில் சவுடு மணல் எடுக்க அனுமதி அளிப்பதற்கு கையூட்டு பெறுதல் போன்ற புகார்களின் அடிப்படையில் சோதனை நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் திடீரென செப்-13 அன்று சுமார் மாலை 4 மணியளவில் கனிமவளத்துறை அலுவலகத்திற்குள் நுழைந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் கதவுகளை தாழிட்டுக் கொண்டு 12 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தினர். கனிமவளத்துறை உதவி இயக்குநராக உள்ள  சீனிவாசராவ் மற்றும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்றதாக தெரிகிறது. லஞ்ச ஒழிப்புத்துறையினர் எழுப்பிய கேள்விகளுக்கு சீனிவாச ராவ் சரிவர பதில் அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து மணல் குவாரி குறித்து பலருடன் சீனிவாச ராவ் பேசிய ஆடியோக்கள் மற்றும் வங்கி பரிவர்த்தனை விவரங்களை அவரது செல்போனில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சேகரித்திருப்பதாக தெரிகிறது. மேலும் முக்கிய ஆவணங்கள் மற்றும் மடிக்கணினி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இதனால் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் பரப்பரப்பாக காணப்பட்டது.