திருவண்ணாமலை,மே 14-திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சி யில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், எக்ஸ்னோரா மகளிர் சுய உதவிக்குழு மற்றும் ஸ்ரீ துர்கா சுய உதவிக் குழு மூலம் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.கடந்த 2008 ஆம் ஆண்டில் இருந்து சுகாதார பணிகளையும், திடக்கழிவு மேலாண்மை பணிகளையும் செய்து வருகின்றனர். இவர்கள் பணியில் சேர்ந்த போது, மாதம் ரூ. 750சம்பளமாக வழங்கப்பட்டது. அதன் பிறகு ரூ. 3 ஆயிரம் ஆக உயர்த்தி வழங் கப்பட்டது. அப்போது துப்புரவு ஊழியர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பேரில், இவர்களுக்கு இறுதியாக ரூ. 4500 சம்பளம் வழங்கப்பட்டது அதிகாலை 5.30 மணிக்கு ஆஜராகி, மாலை 6 மணிக்கு வீடு திரும்பும் இவர்கள் தொடர்ந்து, துப்புறவு பணியினை செய்து வருகின்றனர். தற்போது, கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சி நிர்வாகியாக (ஈஓ) வந்துள்ள, கணேசன் என்பவர், துப்புரவு பெண் பணியாளர்களை, மரியாதை குறைவாக பேசுவதும், ஊதியத்தை குறைத்து கொடுப்பதுமாக செயல்படுகிறார். துப்புறவு பணியாளர்கள் தங்கள், பிரச்சணை குறித்து அவரிடம் பேசச் சென்றால், வெளியே போங்கடி என்று திட்டுவதாக, பெண் பணியாளர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து செவ்வாயன்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது, நாங்கள் அதிகாலை முதல் இரவு வரை கடுமையான துப்புரவு பணி செய்து வருகிறோம். எங்களுடன் பணி செய்த ஊழியர்கள் சிலர், பணி விபத்து காரணமாக உயிரிழந்துவிட்டனர். பணியின் போது சிலர் படுகாயமடைந்து, சிகிச்சையில் உள்ளனர். தற்போது வந்துள்ள பேரூராட்சி நிர்வாகி கணேசன் என்பவர், பெண்களை கேவலமாகவும், ஆபாசமாகவும் பேசுகின்றார். ஊதியத்தை குறைத்து வழங்குகின்றார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.