திருவண்ணாமலை,மே 21-திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் பகுதியில் கடன் பிரச்சனையால் குடும்பத்தினர் அனைவரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் சீனு (32), வேன் ஓட்டுநர். இவர் கடன் வாங்கி சொந்தமாக ஒரு வேன் வாங்கியுள்ளார். மேலும் சிலரிடம் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.கடனை திருப்பி செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டதால், கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் சீனு தவித்து வந்ததாக தெரிகிறது. இதை தொடர்ந்து, இவருக்கு சொந்தமான வேனை கடன் கொடுத்தவர்கள் ஜப்தி செய்து எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் மனமுடைந்த சீனு குடும் பத்தினருடன் அருகிலுள்ள இமாபுரம் பகுதியில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் சீனுவின் மனைவி விஜயலட்சுமி, மகன் ரித்திக் ரோஷன்(6) ஆகியோர் உயிரிழந்தனர். சீனு (32), மகள்கள் திவ்யதர்ஷினி (11), பிரியதர்ஷினி(8) ஆகியோருக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.