தி.மலை, நவ. 21- திருவண்ணாமலை மாவட்டத்தில் தீபத்திருவிழா ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. வெளியூரிலிருந்து வரும் மக்களை வரவேற்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு கொடுத்த பல விவசாயிகளுக்கு, கரும்புக்கு வழங்க வேண்டிய பாக்கி பணம் வழங்காததால் விவசாயிகள் தவித்து வருகின்றனர். மறுபுறம் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் சம்பளம் இல்லாததால் வேதனைப்பட்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா கரைப்பூண்டியில் தனியார் தரணி சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு சேர வேண்டிய நிலுவைத்தொகை இன்று வரைக்கும் வழங்கப் படவில்லை. கரும்பு விவசாயிகள் பலகட்டப் போராட்டங்கள் நடத்தியும் பலனில்லை. இந்நிலையில் கரும்பு ஆலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அக்டோபர் மாத ஊதியம் இந்நாள் வரைக்கும் வழங்கப்பபட வில்லை. தரணி ஆலை பணியாளர்கள் பலமுறை நிர்வாகத்திடம் முறையிட்டும், ஊதியம் வழங்கப்படவில்லை. இதையடுத்து, வியாழனன்று மாலை தரணி சர்க்கரை ஆலை சிஐடியு சங்கத் தலைவர் பாலமுருகன் தலைமையில், செயலாளர் தண்டபாணி மற்றும் நிர்வாகிகள் போளூர் வட்டாட்சியரை சந்தித்து, தங்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனர். வட்டாட்சியர், தரணி ஆலை நிர்வாகத்திடம் பேசுவதாக உறுதியளித்ததின் பேரில், ஊழியர்கள் கலைந்து சென்றனர். ஏற்கனவே இந்த வருடம் தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.