tamilnadu

கடமை தவறிய காவலர்: எஸ்பி-யிடம் சிபிஎம் புகார்

திருவண்ணாமலை, மார்ச் 4- திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு அருகே, வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் புகார் தெரிவித்தும், உடனடியாக குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்காமல், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயார், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார். எனக்கு 4 வயது மகள் உள்ளார். மார்ச் 1 (சனிக்கிழமை) மாலை 2.30 மணிக்கு என் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு என் அம்மா வீட்டுக்கு சென்றேன். அப்போது என் மகள் அழுதுகொண்டு என்னிடம் ஓடிவந்தாள். அவளிடம் விசாரித்த போது, சாக்லெட் தருவதாகக் கூறி கடத்திச் சென்ற சிறுவன், பலாத்காரத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தாள். இதுகுறித்து தச்சம்பட்டு காவல் நிலையம் சென்று புகார் அளித்தேன். அப்போது, காவல் நிலையத்தில், பெண் காவலர் ஒருவரும், காவல் ஆய்வாளர் மணிமாறனும் இருந்தனர். தங்கள் கடமையை செய்யாமல், பணம் வாங்கிக் கொண்டு சமாதானமாக போகச்சொல்லி பஞ்சாயத்து நடத்தி என்னையும், என்னுடன் வந்த கிராமத்தாரையும் மிக கேவலமான வார்த்தைகளில் திட்டினார். எனவே, அந்த இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும். இந்த சம்பவத்தில் இறுதியறிக்கை தாக்கல் செய்து, வழக்கை நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட என் குடும்பத்துக்கு, உரிய நீதியை பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன், வழக்கறிஞர் அபிராமன், ஒன்றியச் செயலாளர் எஸ் .ராமதாஸ், விவசாயிகள் சங்க நிர்வாகி பலராமன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் அன்பரசன், கமலக்கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.